ஈரான் மீதான முற்றுகை நீடிப்பு : உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜூன் 2022க்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 120 டொலரைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான துறைமுக முற்றுகை பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்ததை அடுத்து இவ்வாறு விலை அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பது நீண்டகால மோதல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எண்ணெய் விலையில் உயர்வு
மத்திய கிழக்கில் நிலவும் இந்த அரசியல் பதற்றங்கள் காரணமாக எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் உயர்வு, உலக நாடுகளின் பொருளாதாரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
அந்தவகையில், செவ்ரான் (Chevron) உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் வொஷிங்டனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அமெரிக்காவின் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு விநியோகம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |