யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பலி!
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாவெட்டை வயற் பிரதேசத்தில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த கந்தன் நாகராசா (வயது -57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வழமைபோன்று சம்பவதினமான நேற்று காலையில் மாடு மேய்க்கச் சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டபொழுது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் குடாவெட்டை காட்டுப் பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.