இன்று முதல் நடைமுறையாகும் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி
மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் GovPay செயலி மூலம், போக்குவரத்து மீறல் தொடர்புடைய, அபராதம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து காவல்துறை
மேலும், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஆயிரம் பேருக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் விவகார அமைச்சின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இந்தத் திட்டம் மிக விரைவாக ஆரம்பிக்க முடிந்ததாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அடுத்த சில மாதங்களில் ஏனைய காவல்நிலையங்களுக்கும் கையடக்க தொலைபேசிகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விசேட திட்டம்
இது தொடர்பாக டிஜிட்டல் அமைச்சினால் காவல்துறை அதிகாரிகளுக்கு பல பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட உள்ளன, மேலும் இந்த செயல்முறை ஓகஸ்ட் 4 ஆம் திகதிக்கு முன்னதாக மேல் மாகாணத்தில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வீதி பாதுகாப்பை அதிகரிக்க விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2025 - 2026 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து அமைச்சினால் தயாரிக்கப்பட்ட 85 அம்ச செயற்றிட்டம் அடங்கிய புத்தகம் இந்த நிகழ்வின் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோருக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
