புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் : நீதிமன்றின் அதிரடி உத்தரவு
யாழில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, மன்றில் முன்னிலையாகி இருந்த மீன் வியாபாரி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.
10 ஆயிரம் ரூபா தண்டம்
இதனை அடுத்து, குறித்த வியாபாரியை கடுமையாக எச்சரித்த மன்று 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் உரிய வெப்ப நிலையை பேணாது யோக்கட்களை வாகனத்தில் எடுத்து சென்ற சாரதிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று 30ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், கைப்பற்றப்பட்ட யோக்கட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
யோக்கட்களை 06 செல்சியஸ் வெப்ப நிலையில் கூலர் வாகனத்தில் எடுத்து செல்ல வேண்டிய நிலையில் அதன் வெப்ப நிலையை அதிகரித்து 18 செல்சியஸ் வெப்ப நிலையில் கடைகளுக்கு விநியோகிக்க கொண்டு சென்றார்.
அழிக்குமாறு உத்தரவு
இந்தநிலையில் குறித்த வாகன சாரதிக்கு எதிராக அராலி பொது சுகாதார பரிசோதகர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, சாரதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து சாரதியை கடுமையாக எச்சரித்த மன்று 30 ஆயிரம் ரூபா தண்டம் அறவிட்டது.
அத்துடன் , கைப்பற்றப்பட்ட யோக்கட்கப்கள் அடங்கிய 200 பக்கெட்களையும் அழிக்குமாறும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
