தமிழ்த்தேசியக் கட்சிகளின் கவனத்துக்கு......
சர்வதேச சமூகத்தை நோக்கியே தமிழர் தரப்புத் தமது பலமான, உறுதியான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமே தவிர, அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்திடமோ, காலிமுகத்திடல் போராட்டக் குழுவிடமோ அல்ல.
இன முரண்பாடு 1920 இல் ஆரம்பித்தது. தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைகள் அரசியல் யாப்பு ரீதியாகவும், ஒப்பந்தங்கள் மூலமாகவும், பேச்சுவார்த்தைகள் ஊடகவும் நிறைவேற்றப்பட்ட சான்றுகள் இல்லை. மாறாக உறுதிமொழிகள் மீறப்பட்டே வந்தன.
1948 இல் இருந்து இன்று வரை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுப்பைச் செய்வதற்குச் சிங்கள ஆட்சியாளர்கள் எவருமே உட்பட்டதில்லை. 2009 மே மாதத்தின் பின்னரான சூழலில் சிங்கள ஆட்சியாளர்கள் போரின் பக்க விளைவுகளுக்குக்கூடத் தீர்வை முன்வைக்க விரும்பவுமில்லை.
மாறாக இராணுவ மயமாக்கல், புத்தர் சிலை வைத்தல், பாரம்பரியக் காணி அபகரிப்புகள் போன்ற சிங்கள மயமாக்கல் ஊடாக ஈழத் தமிழர்களின் மரபுரிமை அடையாளங்களை அழிக்கவே திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
திணிக்கப்பட்டுள்ள பௌத்த சமய வரலாறு
ஆண்டு ஆறில் இருந்து ஆண்டு பதினொன்று வரையான தமிழ் வரலாற்றுப் பாட நூலில் பௌத்த சமய வரலாறும் அதற்குரிய சிங்களச் சொற்களும் மிக நுட்பமாகத் திணிக்கப்பட்டுமுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ கல்வித்திட்டப் பிரமாணங்களுக்கு அமைவாக இன்னுமொரு மொழியில் இருந்து மற்றுமொரு மொழிக்குப் பாட நூல்களை மொழிபெயர்ப்புச் செய்வது குற்றமாகும்.
இன்னுமொரு சமய வரலாற்றை மற்றைய இன மாணவர்களுக்குத் திணிப்பது இன அழிப்பாகும் அதற்கு எதிராக யுனெஸ்கோவில் முறைப்பாடு செய்யும் ஏற்பாடுகளும் உண்டு. அதற்குரிய நடவடிக்கைகள் எதனையும் தமிழ்த் தேசியக் கட்சிகள் இதுவரை எடுக்கவேயில்லை.
இன அழிப்பு விசாரணை கோரப்பட்டபோதும், போர்க் குற்ற விசாரணை என்று மடைமாற்றிய அமெரிக்க - இந்திய அரசுகள், தொடர்ந்தும் இலங்கைக்கு நிதி உதவியளித்து வருகின்றன.
முழு மூச்சாக ஈடுபட வேண்டிய தமிழ்த் தேசியக் கட்சிகள்
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களும் உதவியளிக்கின்றன. ஆகவே 2009 மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலில் உரிய முறையில் கையாளத் தவறிய தமிழர் நோக்கிலான சர்வதேச விவகாரத்தை, 2022 யூலை மாதம் ஒன்பதாம் திகதிக்குப் பின்னராவது கன கச்சிதமாகச் செய்வதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் முழு மூச்சாக ஈடுபட வேண்டும்.
குறிப்பாக இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம், எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினை, 2009 இன் பின்னரான வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ மற்றும் சிங்கள மயமாக்கல் திட்டங்கள் என்று சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
ஆதாரங்களுடன் ஆவணங்களைத் தயாரித்துக் கையளிக்க முடியும். மாறாகத் திட்டமிடப்பட்ட இன அழிவுகளுக்குப் பின்னாரன சூழலில், அதுவும் யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான நிலைமையில் இடைக்கால அரசாங்கத்திடமோ, காலிமுகத் திடல் போராட்டக் குழுவிடமோ கோரிக்கை என்ற பெயரில் பிச்சை கேட்கக் கூடாது.
வேண்டுமானால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளுக்கு அனுப்புகின்ற ஆவணங்களின் பிரதிகளை இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பிவிடலாம். ஏனெனில் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கும், இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்ற விரும்பாத சிங்கள ஆட்சியாளர்களுடன் இனிமேல் பேசிப் பயனில்லை என்ற சலிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேசத்தை நோக்கி நீதி கோரும் தார்மீகக் கடமை தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு உண்டு. இதற்குப் பொறுப்புகூற வேண்டிய கடப்பாடு அமெரிக்க - இந்திய அரசுகளுக்கும் உண்டு. ஏனெனில் தமது புவிசார் நோக்கில் 2009 இல் போரை இல்லாதொழிப்பதில் பெரும் பங்காற்றி இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியது இந்த நாடுகள்தான்.
அழுத்தங்களை முன்வைக்க வேண்டியது வரலாற்றுக் கடமை
புலிகளை அழித்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் நிரந்த அரசியல் தீர்வு வழங்கப்படும் என அமெரிக்க - இந்தியத் தூதுவர்கள் 2009 இல் உறுதியளித்ததாகவும், ஆனாலும் பத்து வருடங்கள் சென்று விட்டபோதும் இதுவரை அரசியல் தீர்வு இல்லையெனவும், சம்பந்தன் 2020 ஜனவாி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கூறியிருந்தார்.
ஆகவே எந்தத் தீர்வையாவது கொடுத்துத் தொலைக் வேண்டுமென அமெரிக்க - இந்திய அரசுகள் தமது ஆழ் மனதில் உணரும் வரை, தொடரான பெரும் அழுத்தங்களை முன்வைக்க வேண்டிய பாரிய வரலாற்றுக் கடமை தமிழ்த்தேசியக் கட்சிகளுக்குக் குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உண்டு என்பதை நிராகரிக்கவே முடியாது.