எரிபொருள் விலை அதிகரிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு அரசின் விசேட சலுகைகள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், அரசாங்கம் புதிய விசேட மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை ஆற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடற்றொழிலாளர்களுக்கான விசேட சலுகைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சாதாரண இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள 100 ரூபாய் பொதுவான மானியத்துடன் மேலதிகமாக 50 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
எரிபொருள் மானியம்
ஒரு லீற்றர் எரிபொருளுக்கு (பெட்ரோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய்) மொத்தம் 150 ரூபாய் மானியம் கிடைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாளைக்கு 25 லீற்றர் வீதம், மாதம் 25 நாட்களுக்கு கணக்கிடப்பட்டு, மாதத்திற்கு 31,250 ரூபாய் நேரடியாக கடற்றொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த விசேட கொடுப்பனவு அடுத்த மூன்று மாதங்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபடும் பல நாள் படகுகளுக்கு ஒரு பயணத்திற்கு தலா 1.5 இலட்சம் ரூபாய் (150,000) எரிபொருள் கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கடலுக்குச் செல்லும் இந்த கடற்றொழிலாளர்களின் எரிபொருள் செலவைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |