பயங்கரவாத புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்ட கம்மன்பில! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்ட சர்ச்சைக்ககுரிய கருத்து தொடர்பாக காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) அவரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்காக விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, இன்று(11) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான அவரிடம் சுமார் நான்கு மணிநேரம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், குறிப்பாக வெளிநாடுகளில் விசேட பயிற்சி பெற்ற சில தனிநபர்கள் இதுவரை கைது செய்யப்படவோ அல்லது முறையான புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவோ இல்லை எனவும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மேற்படி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
அதன்போது, இந்த அறிக்கைகள் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து விசாரணை அதிகாரிகள் கம்மன்பிலவிடம் கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, தனது தரப்பு விளக்கங்களை அறிக்கையாக சமர்ப்பித்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |