கடற்படையில் உத்தியோகபூர்வமாக இணைந்தது சமுத்ரவிஜய
இலங்கைக் கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல், ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தால் கடந்த 2025 டிசம்பர் 2 ஆம் திகதி இந்தக் கப்பல் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்
கடற்படையின் செயற்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 பெப்ரவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் பால்டிமோரில் உள்ள கடலோரப் பாதுகாப்புக் கப்பல் தளத்திலிருந்து கொழும்பு நோக்கி இது தனது பயணத்தை ஆரம்பித்தது.

இந்தக் கப்பலின் வருகையானது இலங்கையின் கடல்சார் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடல்சார் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடல் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் சர்வதேச கடல்சார் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தக் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக, பிராந்திய சவாலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச கடல்சார் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இது மிக முக்கியமானதொரு வளமாக அமையும்.
உத்தியோகபூர்வமாகப் பணி
இந்நிகழ்வின் போது, கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் கயான் விக்கிரமசூரிய, கப்பலை உத்தியோகபூர்வமாகப் பணியில் இணைப்பதற்கான அதிகாரப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கப்பலின் பெயர்ப் பலகை மற்றும் உத்தியோகபூர்வ இலச்சினையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி, கப்பலில் கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டார்.

இதன்போது கப்பலின் செயற்பாட்டுத் தயார்நிலை குறித்து கடற்படைத் தளபதி விளக்கமளித்தார். மேலும், விசேட விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் நினைவுக் குறிப்பொன்றை பதிவிட்ட ஜனாதிபதி, கப்பலின் பணியாளர்களுடன் குழுப் படத்திலும் இணைந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அமெரிக்க பதில் தூதுவர் ஜேன் ஹோவெல், சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் மெத்யூ ஹவுஸ் உள்ளிட்ட அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளும், இலங்கை தரப்பில் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் காஞ்சன பானகொட, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 20 மணி நேரம் முன்