ஜெனிவாவில் தப்பிக்க இந்தியாவை வளைக்கும் கோட்டாபய - வெளிப்படுத்திய ஆங்கில ஊடகம்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் இலங்கைக்கு பாதகமான நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய இந்தியாவின் ஆதரவுடனான இனநல்லிணக்க முயற்சிகள் குறித்து அறிவிக்கவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தும்போது அரச தலைவர் கோட்டாபய, இந்தியாவின் ஆதரவுடனான நல்லிணக்க முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக வாக்குறுதி வழங்குவார். அவரின் உரையின் முக்கிய விடயமாக இதுவே காணப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கம் அறிவிக்கவுள்ள நல்லிணக்க திட்டத்திற்கான வரையறைகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது இடம்பெறுகின்றன-பொதுவான உடன்படிக்கைகளில் உள்ள சிக்கல்களை ஆராயவேண்டியுள்ளது. இலங்கையின் அரசியல் தலைவர்கள் பரந்துபட்ட உறுதிமொழிகளை வழங்கியுள்ள 13வது திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது- இந்திய தலைவர்களும் இதனை அங்கீகரித்துள்ளனர். இதற்கு முன்னோடியாக இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு இந்த விடயத்தில் ஆதரவு கிடைத்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள புதிய சாதகமான சூழ்நிலை காரணமாக – ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது ஆதரிப்பதன் மூலம் -இலங்கைக்கு உதவுவது தொடர்பில் தமிழ்நாட்டில் காணப்படும் விமர்சனங்களை தவிர்க்க கூடிய சாதகமான நிலை புதுடில்லிக்கு கிடைக்கும்.
எனினும் எவ்வாறான விடயங்களிற்கு தீர்வை காணவேண்டும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில்நடைபெற்ற தேர்தலில் நான்கு ஆசனங்களை வென்ற பா.ஜ.க இலங்கை தமிழர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதன் மூலம் மாநிலத்தில் அதன் நிலையை மேலும் மேம்படுத்த முயலும் என கருதுகின்றது.
தமிழ்கட்சிகள் பொதுவான நிலைப்பாட்டை முன்வைக்கவேண்டும் – அதன் மூலம் அதனை ஆரம்பபுள்ளியாக கருதலாம் என புதுடில்லி தமிழ் கட்சிகளிற்கு வேண்டுகோள் விடுத்திருப்பதற்கும் இதுவே காரணம்.
எனினும் இந்த ஆரம்பகட்ட முயற்சிகளில் மலையக முஸ்லீம்கட்சிகளின் நிலைப்பாடுகள் காரணமாக பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன எனினும் தற்போது புதிய வரைபொன்றை தயாரிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன அது எந்தவேளையிலும் தயாராகலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.