கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த விசேட உத்தரவு!
காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீர்ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்குச் சாட்சியம்
இதனடிப்படையில் அன்றைய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி, இணையவழி (Online) மூலமாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2011 டிசம்பர் 10 அன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த காணாமல்போனோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த வேளையில், லலித்குமார் வீர்ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவாரங்கல் பகுதியில் வைத்துக் காணாமல்போயினர்.
யாழ்ப்பாணத்தில் விசாரணை
2012 இல் இவர்களின் உறவினர்களால் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) தாக்கல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி 2012 செப்டம்பர் 19 அன்று யாழ்ப்பாணத்தில் விசாரணை ஆரம்பமானது.
மீண்டும் விசாரணை
2017 இல் இவ்வழக்கின் சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்சவின் பெயர் சேர்க்கப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களினால் தம்மால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக முடியாது எனப் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபய ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்ததுடன், தனது சட்டத்தரணிகள் ஊடாக இணையவழியில் சாட்சியமளிக்க அனுமதி கோரியிருந்தார்.

அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பொருத்தமான ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி அங்கிருந்து இணையவழியில் சாட்சியமளிக்க அனுமதி அளித்திருந்தது.
அதனடிப்படையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இருந்தவாறு சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |