ஆட்சியாளர்கள் பொய்யர்கள்! நல்லாட்சியையும் விட மோசமான ஆட்சிதான் இது - எதிர்க்கட்சி பகிரங்கக் குற்றச்சாட்டு
ஈஸ்டர் தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் மிகுந்த வேதனைகளோடு இருக்கின்றனர். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கியதாகத் தெரியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் மனித உரிமைகள் விவகார பிரதானியுமான காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள், நிதி உதவி வழங்கியவர்கள், பின்னனியில் இருந்து செயறப்படுத்தியவர், உதவி வழங்கிய அரசியல் தலைவர்கள், ஏனைய உபகரண உதவிகளை வழங்கியவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதாகக் கூறிய ஆட்சிக்கு வந்தவர்கள் இதைப் பொறுட்படுத்தாமல் இருக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல் கோட்டேயில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. என்னையும் அதில் ஓர் அங்கத்தவராக நியமித்தனர்.
துறை சார் விசாரணைக் குழுவாக இல்லாததால் அதை இராஜினமா செய்தேன். பின்னர் தெரிவுக் குழுவின் பல கட்ட செயற்பாடுகளில் பங்கேற்றோம். தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும் போது இத் தாக்குதலை முன்னிலைப்படுத்தி சிங்கள முஸ்லிம் சமூகங்களிடையே பாரிய இன விரிசலைத் தூண்டினர். வைராக்கியத்தை தூண்டினர். விசாரணைகளில் நம்பிக்கையில்லை என்று கூறினர்.
ஷாபி சாஹாப்தீன் என்றனர், ஷரிஆ சட்டம் என்றனர், பல்கலைகழகம் என்றனர் இவ்வாறு இன்னும் பலதைக் கூறினர். இப்போது இவை எங்கே? ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பான 120இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர். நாளுக்கு நாள் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
நல்லாட்சியில் விசாரணை நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை. திருப்தி இல்லை என்றும் பலவீனமான ஆட்சி என்றும் கூறி தற்போது ஆட்சிக்கு வந்துள்ளவர்கள். என்ன முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நல்லாட்சியை விடவும் இவர்கள் பொய்யர்கள். இரண்டு ஆட்சியும் இவ்வாறு தான். இன்னும் கூறுவதாக இருந்தால் நல்லாட்சியையும் விட மோசமான ஆட்சிதான் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஈஸ்டர் தாக்குதல் விடயங்களைத் தெரிந்து கொண்டே இழுத்தடிப்பு செய்கின்றனர். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. கர்தினலுக்கும் சமர்பிக்கவில்லை. இவ்வளவு முக்கியமான ஓர் விடயத்தை ஏன் இழுத்தடுக்கின்றனர். இந்த அறிக்கையை வடிவமைக்க பொதுமக்கள் நிதி தான் பநன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மக்களுக்கு இது குறித்த தகவல்களை வழங்க வேண்டும். மக்களுக்கும் இது தொடர்பில் தேவையும் உண்டு. சகல தகவல்களையும் தெரிந்து கொண்டே தகவல் மறைப்பு செய்கின்றனர். தற்போது இருக்கும் மொழியில் துரிதமாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்து விவாதங்களை வழங்கி ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து நீதிக்கட்டமைப்பில் தண்டனை வழங்கலாம். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை மீள் பரிசீலனை செய்ய ஜனாதிபதி விஷேட குழுவை நியமித்துள்ளார். இதில் எதிர்க் கட்சியினர் எவரும் இல்லை.
வெளிப்படைத்தன்மை இல்லை. ஜோன்ஸ்டன் பெர்னாண்டே ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர். பிரசன்ன ரணதுங்க பொஹொட்டுவவின் கம்பஹா மாவட்ட தலைவர், உதய கம்பன்பில ஆளும் கட்சியின் துணை கட்சியின் தலைவர். இவர்களில் நம்பிக்கை வைக்க முடியுமா? இந்த அரசாங்கத்திற்கு தூர நோக்கு இல்லை. இன்று அமைச்சுகளைக் கொண்டு செல்ல எந்த திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை. பொருட்களின் விலை குறித்து ஜனாதிபதி ஒன்றை கூறினார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஒன்றை கூறினார்.
இரண்டு போர் கூறியும் பயனில்லை இல்லை. வர்த்தமானிகள் தான் மாத்திரம் வெளியிட்டப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் கொரோனாவின் 4 ஆம் அலை முடிவடைந்து 5 ஆம் அலையும் ஏற்படும் வாய்ப்புள்ளது. அரசாங்கம் இதை சரியான முறையில் கையால முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நாங்கள் அட்சியில் இருக்கும் போது நாட்டில் சர்வதேச சூழ்ச்சி, சர்வதேச உளவுத் துறையின் வருகை, அரச சார்பற்ற நிறுவனங்களின் கூடிய பங்களிப்பு நடமாட்டம் இங்கு இடம் பெறுவதாக கூறினர்.
இன்று நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ? என்றும் கேள்வியொழுப்பினார். மறுபக்கம் நாட்டின் வட கிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுகின்றனர். புதைப்பதற்குரிய அனுமதையைக் கோரி முஸ்லிம்கள் போராடுகின்றனர். கத்தோலிக்கர்கள் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நியாயம் கோருகின்றனர். சர்வதேசத்தில் ஜெனிவா மனித உரிமைப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.
நாடு பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இவற்றை முட்டாள்தனமாக கையாலாமல் அரசாங்கம் அறிவு பூர்வமாக கையாள வேண்டும்.
மனித உரிமைப் பிரச்சினை ஒர் சர்வதேச பிரச்சினை அதை சர்வதேச பங்களிப்புடன் தீர்க்க வேண்டும். இலங்கைக்குள் தீர்க்க அது உள்நாட்டுப் பிரச்சினை மாத்திரமல்ல. எனவே இவற்றை புத்திசாலித்தனமாக கையாளுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.