கடற்றொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வருகிறது ஓய்வூதியத்திட்டம்
கடற்றொழிலாளர்களுக்காக அதிக நன்மைகளை வழங்கக்கூடிய புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளன.
கடற்றொழிலாளர்களின் வருமான நிலை மற்றும் விருப்பத்திற்கேற்ப தமக்கான ஓய்வூதியத் திட்டத்தைத் தெரிவு செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டிருப்பது இத்திட்டத்தின் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.
ஓய்வூதியத் தொகை
இதன்படி, கடற்றொழிலாளர்கள் 60 வயதை எட்டிய பின்னர் மாதாந்தம் ரூ.5,000, ரூ.10,000, ரூ.15,000, ரூ.20,000, ரூ.25,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையை ஓய்வூதியமாகப் பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் இணைந்து பங்களிக்க முடியும்.

இந்த ஓய்வூதியத் திட்டத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், 60 வயதிற்குப் பிறகு ஒருவரது வயது அதிகரிக்கும் போது அவர் பெறும் ஓய்வூதியத் தொகையும் அதிகரிப்பதாகும்.
உதாரணமாக, ஒருவர் ரூ.1,000 ஓய்வூதியத் திட்டத்திற்குப் பங்களிப்பு செய்தால், அவருக்கு 64 முதல் 70 வயது வரை ரூ.1,250 உம், 71 முதல் 77 வயது வரை ரூ.2,000 உம், 78 வயதிற்குப் பின்னர் ரூ.5,000 உம் மாதாந்த ஓய்வூதியமாகக் கிடைக்கும்.
மேலதிக நன்மை
மேலதிக நன்மைகளாக, இத்திட்டத்தில் இணைந்திருப்பவர்களுக்கு ஆயுள் காப்புறுதி நன்மைகள் கிடைப்பதுடன், ஓய்வூதியம் பெறுபவர் உயிரிழந்தால் அந்த ஓய்வூதியத் தொகையை அவரது மனைவி அல்லது கணவர் தொடர்ந்து பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டுமன்றி, கடற்றொழில் சார்ந்த ஏனைய தொழில்களில் ஈடுபடுபவர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |