இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை - நீதிமன்ற படியேறிய இளவரசர் ஹாரி
இங்கிலாந்தில் தனது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் தானும், தனது குடும்பத்தினரும் அங்கு வருவது ஆபத்தானது என்று இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த 2020-ம் ஆண்டு விலகினர். தற்போது அந்த தம்பதி தங்களின் 3 வயது மகன் ஆர்ச்சி மற்றும் 8 மாத மகள் லில்லிபெட்டுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு அரசின் செலவில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். ஹாரியும், மேகனும் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் அவர்கள் அந்த தகுதியை இழந்தனர்.
இதனால் இளவரசர் ஹாரி தான் இங்கிலாந்துக்கு வரும்போது தன்னுடைய செலவில் தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரினார். ஆனால் அதை இங்கிலாந்து அரசு மறுத்துவிட்டது. இதை எதிர்த்து இளவரசர் ஹாரி லண்டன் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றில் நேரில் ஆஜராகாத இளவரசர் ஹாரி தனது சட்டத்தரணி மூலம் எழுத்துபூர்வமாக தனது வாதத்தை எடுத்து வைத்தார். அதில் அவர் “குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்கவும், தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கவும் இங்கிலாந்து வர விரும்புகிறேன்.
ஆனால் அங்கு நான் பாதுகாப்பாக உணரவில்லை. குறிப்பாக எனது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் நானும், எனது குடும்பத்தினரும் அங்கு வருவது ஆபத்தானது” என கூறியிருந்தார்.
அதன் பின்னர் இங்கிலாந்து அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, “ஹாரியின் கூற்றுகள் விவாதமற்றது மற்றும் தகுதியற்றது” என கூறினார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
