பௌத்தம் மென்மையானதா...!
அண்மைக்காலமாக தமிழக சினிமாப் படங்களில் பௌத்தத்தை ஓர் அமைதிவழி மதத்தின் குறியீடாகக் காட்டப்படுவதை அவதானித்திருப்போதும்.
பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற தலித்திய சினிமா இயக்குநர்கள் தம் படங்களில் பௌத்த தத்துவங்களையும், புத்தர் சிலைகளையும் பயன்படுத்திவருகின்றனர்.
அதாவது ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவர்கள் தம் துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய ஆயுதமாக பௌத்தத்தையும், புத்தரையும் இத்தகைய சினிமாக்கள் முன்மொழிகின்றன. உண்மையில் பௌத்தத்திற்கு இத்தகைய சக்தியுள்ளதா?
உண்மையில் புத்தரும், அவர் உலகிற்கு போதித்த தத்துவங்களும் மிக உன்னதமானவை. மானுட வாழ்வுக்கு அமைதியையும், அன்பையும், பிறர்க்கு துன்பம் விளைவிக்காமையையும் போதிப்பவை.
பௌத்தம் ஆயுதமல்ல
புத்தர் பௌத்தத்தை ஒரு மதமாக எங்கேயும் பிரகடனம் செய்யவில்லை. பௌத்தத்தை ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆயுதமாக எங்கேயும் பயன்படுத்தவுமில்லை. அதனை ஒரு வாழ்வியல் நெறியென்றார். வாழ்வுக்குப் பயன்படுத்தவேண்டிய தத்துவமென்றார். அத்தத்துவத்தின்படி தன் வாழ்வினை வாழ்ந்து, உலகப் பற்றுப் பாசங்களிலிருந்து விடுபட்டு வாழ்ந்து காட்டினார் புத்தபெருமான்.
எனவே பௌத்தமும், புத்தரும் அவரவர் வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய நற்பண்புகளே தவிர, அது ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதமல்ல. மறுபுறத்தில் ஒடுக்குமுறைக்குள்ளாவோர் மதமாகவோ, தத்துவமாகவோ பின்பற்ற தற்போது பௌத்தமும், அதனைப் பின்பற்றுவோரும் புத்தர் போதித்தவைகளையா பின்பற்றுகின்றனர்? அதற்கு பௌத்தம் நிலவும் நாடுகளில் எங்கேயாவது எடுத்துக்காட்டுகள் உள்ளனவா?

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை
இல்லை என்றுதான் இந்தக் கேள்விக்கும் பதில் எழுதவேண்டும். உலகில் பௌத்த மதத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்டு ஆட்சி நடத்தும் பிரதான மூன்று நாடுகளுமே தன் நாட்டில் வாழும் சக இனங்களை அடக்கி – ஒடுக்கி இனப்படுகொலை செய்ததன் ஊடாகவே உலகின் முன் அறிமுகப்பட்ட நாடுகளாக இருக்கின்றன.
அதிகளவு பௌத்தர்களைக் கொண்ட கம்போடியாவில் 1975 ஆம் ஆண்டு தொடக்கம் 1979 ஆண்டு வரை அரசபடைகள் மேற்கொண்ட இனப்படுகொலையில் கிட்டத்தட்ட 02 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்ததாக அதிகளவு பலமிகு பௌத்தத்தை தன் அரச மதமாகக் கொண்டிருக்கும் இலங்கை அரசு 1948 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரை தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல லட்சம். பௌத்தத்தைத் தலைமை மதமாகக் கொண்டிருக்கும் மியன்மாரில் இன்றும் றோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராகப் பெரும் இனவெறித் தாக்குதல்களையே பௌத்தப் படைகள் நடத்திக்கொண்டிருக்கின்றன.

இலங்கை என்கிற நாட்டின் உருவாக்கத்திற்கே பௌத்தம் தான் அடிப்படை வகுத்துக்கொடுத்தது என்கிற அளவிற்கு மிக இறுக்கமானதும் வன்முறை மிக்கதுமான வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
வரலாற்றுக்கு முன்பிருந்தே பௌத்தம் நிலைத்திருப்பதற்கான தீவுகளில் ஒன்றாக இலங்கையை புத்தபெருமான் தேர்ந்தெடுத்தார் எனவும், பௌத்தத்திற்கு எவ்விதத்திலும் தீங்கு நேராவண்ணம் பார்த்துக்கொள்வது மட்டுமே அரசின் வேலை எனவும் வரலாறு உருவாக்கப்பட்டிருக்கின்றது.
பௌத்தத்தைப் பின்பற்றாதவர்கள் கொல்லப்ப்படவேண்டியவர்கள். அவர்களைக் கொல்வதனால் சொர்க்கத்திற்குப் பயணமாகும் வாய்ப்பு எவ்விதத்திலும் தடைப்படாது என்கிற தோரணையில் தமிழர்களைப் பாரியளவில் படுகொலைசெய்த துட்டகாமினி என்கிற சிங்கள அரசனுக்கு பௌத்த துறவிகள் அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.
அதனையே இன்றைய சிங்கள ஆட்சியாளர்களும் கைக்கொள்கின்றனர். எனவே இலங்கையில் மிக மோசமான – மனித குலத்திற்கு விரோதமான அரசியல் ஒழுக்கத்தை பௌத்தம் கற்பித்திருக்கின்றது. கற்பித்துக்கொண்டிருக்கின்றது.
இலங்கை பௌத்த துறவிகளின் விதிகள்
இன்றைய நாட்களின் சமூக வலைதளங்களில் அதிகளவில் இலங்கை பௌத்த பிக்குகளின் காணொலிகள் வெளியாகின்றன. அந்தக் காணொலிகளில் தோன்றும் பௌத்த பிக்குகள் மிக ஆக்ரோசமாக கைகளை இறுக்கமாகப் பிடித்து நீட்டி எதிரில் இருப்பவர்களை ஆக்ரோசத்தோடு பேசுவதும், கெட்டவார்த்தைகளை கொட்டுவதும், மிரட்டுவதும், பற்களைக் கடித்துக்கொண்டு அடிக்கப்பாய்வதுமாக காணப்படுகின்றனர்.
இதுவும் இன்று நேற்று உருவான பௌத்தப் பழக்கவழக்கமல்ல. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இதுதான் நிலை. இந்நாடு சிங்கள பௌத்த நாடு. அவர்கள் மட்டுமே இந்நாட்டிற்கு உரித்துடையவர்கள். அவர்கள் மட்டுமே இங்கு வாழலாம் எனும் இனவெறிக்கொள்கையுடைய பௌத்த பிக்குகள் இந்நாட்டின் வரலாறு முழுவதுமே கலவரக்காரர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்.
நாட்டில் தமிழர்களுக்கு எதிராக வடக்கிலும், தெற்கிலும் ஏவப்பட்ட அனைத்துக் கலவரங்கள், இனப்படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு சம்பவங்களுக்குப் பின்னாலும், பௌத்த பிக்குகளின் ஆவேசமான உரைகளைக் கேட்டு அதன்பால் ஈர்க்கப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் ஏராளாம்.
தாம் மட்டுமல்லாது, தம்மிடம் ஆன்மீக ஞானம் பெற வருபவர்களையும் வன்முறையாளர்களாக மாற்றி தம் இருப்பிற்கு இலங்கை பௌத்தம் பயன்படுத்தி வந்திருக்கின்றது. அடுத்தவர் மீது அன்பையும், கருணையையும் பொழியச் சொன்ன பௌத்த தத்துவம், இலங்கையின் பௌத்தம் போதிக்கும் எதனையுமே வலியுறுத்தவில்லை.

பௌத்த துறவிகள் முற்றும் துறந்து, உலகப் பற்றுப் பாசங்களிலிருந்து விடுபட்டு, மக்கள் தரும் பிச்சையிலேயே வனங்களில் வாழவேண்டும் என்கிறது பௌத்தம்.
ஆனால் இலங்கையின் பௌத்த துறவிகள் வாழ்வின் அனைத்து இச்சைகளுக்கும் உட்பட்டவர்களாக வாழ்கிறார்கள் என்பதற்கு சமூக ஊடகங்கள் முழுவதும் காணொலிகள் கொட்டிக்கிடக்கின்றன.
ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோடு தனியறையில் தங்கியிருந்த நிலையில் பிரதேச மக்களால் நிர்வாணமாக்கி அம்பலப்படுத்தப்பட்ட பௌத்த பிக்கு பற்றிய செய்திகள் அண்மையில் வந்தன
. தன்னிடம், விகாரைக்கு ஆசிபெற வந்த பெண்களைப் பாலியல் குற்றத்திற்குட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் அண்மையில் கைதுசெய்திருந்தனர்.
குடிபோதையும், போதைதரும் பதார்த்தங்களையும் பயன்படுத்தும் பௌத்த துறவிகளை இலங்கையின் வீதிகளில் சாதாரணமாகவே அவதானிக்க முடியும். இவ்விடத்திலெல்லாம் பௌத்தம் போதித்த ஒழுக்கம் பற்றிய எவ்விதியையும் இலங்கை பௌத்த துறவிகள் பின்பற்றவில்லை.
தமிழர் நிலங்களை கோரும் துறவிகள்
ஒரு நாட்டின் தொல்லியல் என்பது அந்நாட்டின் மெய் வரலாற்றின் எச்சங்களாகக் கொள்ளப்படுபவை. ஆனால் இலங்கையின் தொல்லியல் என்பது தமிழ் மக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் ஒரு கருவியாக மாற்றப்பட்டிருக்கிறது.
இவ்வாறு மாற்றிய பெருமை பௌத்த பிக்குகளையே சாரும். தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, பௌத்த துறவிகள் பணிக்கும் வேலைகளைச் செய்யுமளவுக்குப் பணிக்கப்பட்டிருப்பதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடகங்களின் முன்னிலையில் ஒப்புக்கொண்டிருக்கின்றார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பாகங்களில் இருக்கின்ற தொன்மையான சைவ வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைத்து, பௌத்த துறவிகள் குடியேறுவதற்கும், அவர்களுக்கும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பதற்காக அவ்விடங்களைப் பயன்படுத்துவதற்கும், பல நூறு ஏக்கர் காணிகளை தொல்லியல் பாதுகாப்பு எனும் பெயரில் தமிழர்களிடமிருந்து அபகரித்துக் கொள்ளவும் பௌத்த தேரர்கள் இரவு பகலாக பாடுபடுகின்றனர்.

இராணுவம், காவல்துறை, நீதி, நிர்வாகம் உள்ளடங்கிய அரசின் அனைத்துக் கட்டமைப்புக்களும் பௌத்த பிக்குகளில் இவ் அடாத்து நடவடிக்கைகளுக்கு எதிராகக் காரியமாற்றத் தயங்குகின்றன. அஞ்சுகின்றன.
குருந்தூர்மலையில் குடியேறியிருக்கும் பௌத்த துறவி அப்பிரதேசத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்கள் இப்போதும் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தும் 247 ஏக்கர் காணிகளைக் கோருகின்றார். புல்மோட்டையில் குடியேறியிருக்கும் பௌத்த துறவி தென்னமரபடியின் தமிழ் மக்களது பூர்வீக நிலத்தில் 500 ஏக்கர் காணியைக் கோருகின்றார்.
பௌத்த துறவிக்கு சொத்துக்கள் ஏன்
முற்றிலும் துறந்து, பரிநிர்வாணம் அடைவதையே தம் இலட்சியமாகக் கொண்டிருக்க வேண்டிய பௌத்த துறவிக்கு, ஒரு பெரும் பணக்காரனுக்கு இருக்கவேண்டிய இவ்வளவு சொத்துக்கள் ஏன்?

ஆகவே பௌத்தம் தன் உடனடியாக சீர்திருத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதன் மீது போர்த்தப்பட்டிருக்கும், அமைதி, அன்பு, அறம், உயிர்நேசிப்பு போன்ற கவர்ச்சிமிகு போர்வைகள் விலக்கப்படவேண்டியிருக்கின்றது.
இவ்வாறு கோரமிகு வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கும் பௌத்தத்தைப் பின்பற்ற முன்மொழிய முன் அதன் நடப்பு நடைமுறைகளைப் பற்றிய வாதவிவதாங்களையும் ஆரம்பிக்கவேண்டியிருக்கின்றது.
இவற்றில் எதனையும் செய்யாது புத்தர் பரிநிர்வாணம் அடைந்தபோது இருந்த பௌத்தமே இப்போது இருக்கிறது என நம்பிக்கொண்டு அதனை முன்மொழிவதானது, உலகிற்கு அறத்தையும், அன்பையும், நீதியையும் போதித்த தமிழர்களையும் இனப்படுகொலையாளர்களாக – மிலேச்சத்தனமிகு ஒடுக்குமுறையாளர்களாக மாற்றும் முயற்சியே ஆகும்.
ஏனெனில் தற்போதைய பௌத்தம் என்பது ஒடுக்குமுறையின் ஒரு கருவிதான். அது அதிகாரத்தின் பலத்தை பல்கிப் பெருக்கவே சேவகம் செய்கின்றது.