உள்ளூராட்சி மன்றங்களில் சஜித் - மகிந்த இணைவு : எச்சரிக்கும் கஜேந்திரகுமார்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) , சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் (SLPP) இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்குமானால் தென்னிலங்கை மக்களின் அரசியல் அபிலாசை கேள்விக்குறியாகுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் கட்சிகள் தெற்கில் இருக்க கூடிய சாதாரண மக்களின் விருப்பத்தை மீறுகின்ற வகையிலே அதனை துஸ்பிரயோகம் செய்யும் வகையில் நாங்கள் உடந்தையாக இருக்க கூடாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு வவுணதீவில் நேற்று (18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி
விசேடமாக உள்ளூராட்சி சபைகளில் கூட்டாக செயற்பட்டு ஆட்சி அமைப்பதற்காக எங்களுக்கு இதற்கு முதல் எதிரணியில் இருந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ தமிழ் தேசிய பேரவைக்கோ அழைப்பிதழ் எதுவும் விடுவிக்கப்படவில்லை.
இதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஏற்பாட்டிலே பேச்சுவார்த்தை சுற்று நடைபெற்றது. ஆனால் இரண்டாம் கட்டமாக ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனை கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடாத்த நாங்கள் அது தவறு என கருத்தை தெரிவித்தோம். உண்மையில் இரண்டாவது கட்சியாக தெற்கிலே ஜக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
அதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி விரும்பி செய்திருக்கின்றதே தவிர வேறு ஒரு தரப்பு அதில் முந்துவது பொருத்தமில்லை என்பது எங்களது பார்வை.
எனவே தேசிய மக்கள் சக்தி சிறிலங்கா பொதுஜன பெரமுனவை அழைத்திருப்பது எங்களுக்கு ஒரு பலத்த மாற்றம். ஏன் என்றால் தெற்கிலே ஒரு அறம் இல்லாத அரசியல் நடக்கின்றதா என்றவளவுக்கு கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
எதிர்த்த கட்சிகள்
ரணில் விக்ரமசிங்க மொட்டுக்கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தபோது ஜக்கிய மக்கள் சத்தி, தேசிய மக்கள் சக்தி, எங்கள் போன்ற கட்சிகள் உறுதியாக அதனை எதிர்த்தோம்.
அந்த வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனை கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வைத்திருக்க அவ்வகையான பெரும்பான்மையை கொண்ட கட்சிகளுடன் தாங்கள் போய் ஜனாதிபதி, பிரதமர் பதவியை ஏற்கமுடியாது என்ற வகையில் ஜக்கிய மக்கள் சக்தி அன்று பேசினார்கள்.
அவ்வாறு பேசியதற்கான பிரதான காரணம் அந்தளவுக்கு மொட்டு தரப்பு ஊழல் செய்தது மக்களால் வெறுக்கப்பட நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களுக்கு எதிராக ஒழுக்க காற்று நடவடிக்கை பாயவேண்டும் என பேசியவர்கள் இன்று ஆட்சியமைப்பதற்காக அதே மொட்டுக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றால் எங்களை பொறுத்தவரையில் தெற்கில் இந்த மக்கள் இன்னும் விரக்தி நிலைக்கு தள்ளப்பட போகின்றனர்.
அதேவேளை தேசிய மக்கள் சக்தி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இன்று அவர்களது வாக்கு வங்கியில் அரைவாசி 6 மாதத்தில் குறைந்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
எனவே அதற்கு மாற்றாக வளரக்கூடிய ஜக்கிய மக்கள் சக்தி எந்த விதமான அறிவும் இல்லாமல் நடந்து கொள்ளும் வகையில் மொட்டுக்கட்சியை அழைத்து ஆட்சியமைக்க பேசுவது தென்னிலங்கையில் இருக்க கூடிய மக்களது அரசியல் அபிலாசைகள் மிகப் பெரும் கேள்விக்குறியாக மாறும்.
எனவே தமிழ் கட்சிகள் தெற்கில் இருக்க கூடிய சாதாரண மக்களின் விருப்பத்தை மீறுகின்ற வகையிலே அதனை துஸ்பிரயோகம் செய்யும் வகையில் நாங்கள் உடந்தையாக இருக்க கூடாது.
எங்களுக்கு ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது அது தீர்கப்பட வேண்டும். அதற்கு தெற்கில் இருக்கின்ற சிங்கள மக்களின் ஆதரவு தேவை எனவே அவர்களுக்கு தேவைப்படுகின்ற விடயங்களில் அவர்களது நம்பிக்கையை இழக்கப்படும் வகையில் அவர்களுடைய விவகாரங்களில் தமிழ் மக்கள் நடந்து கொள்ள கூடாது.
எனவே ஜக்கிய மக்கள் சக்தி இப்படித்தான் நடந்து கொள்ளப் போகின்றது என்றால் தமிழ் மக்களுக்கும் ஜக்கிய மக்கள் சக்திக்கும் இடையேலான தொடர்பாடல் எதிர்காலத்தில் மிகவும் குறைவாக இருக்கப் போகின்றது.
எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் மக்கள் கணிசமான வாக்கையளித்தனர் என்பதை தமிழ் மக்கள் மறக்க கூடாது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
