விரைவில சிக்கப்போகும் ராஜபக்ச கும்பல் : கனடாவிலிருந்து ஒலித்த குரல்
“ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றவாளிகள் ஈழத்தமிழர்களுக்கு இழைத்த குற்றங்களுக்கு பொறுப்புக் கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்”என கனடாவின்(Canada) பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நேற்று (18.05.2025) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று நாங்கள் தமிழ் இனப்படுகொலை தினைத்தை நினைவுகூறுகின்றோம்.
பாரிய இனப்படுகொலை
தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இனப்படுகொலையில் ஈடுபட்ட யுத்தத்தின் 16வது வருட நிறைவை நினைவுகூருகின்றோம்.
உயிர் தப்பிய பலர் கனடாவிற்கு பாதுகாப்பிற்காக தப்பியோடிவந்தனர். நாங்கள் இழக்கப்பட்ட உயிர்களை சிதறடிக்கப்பட்ட குடும்பங்களை, நிரந்தரமாக பாதிக்கப்பட்ட சமூகங்களை நினைவுகூருகின்றோம்.
இந்த வலியின் சுமையையும் அன்புக்குரியவர்களின் நினைவுகளையும் தொடர்ந்து சுமக்கும் பிரம்டன் மற்றும் கனடா தமிழ் சமூகத்துடன் உறுதியாக இணைந்திருக்கின்றோம்.
இனப்படுகொலை நினைவுத்தூபி
பிரம்டன் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் இருப்பிடம் என்பதால் இந்த வருடம் பிரம்டனிற்கு மிகவும் விசேடமானது.
இது ஒரு சக்திவாய்ந்த நினைவுச்சின்னமாகும். இந்த நினைவுச்சின்னம் கடந்த காலத்தை நினைவூட்டுவதாகவும், உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்திற்கான அழைப்பாகவும் விளங்குகின்றது.
அதேவேளை ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
நீதிக்காக, ஒற்றுமையுடன் ஒன்றாக நிற்பதற்கும் எங்களை அர்ப்பணிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
