தமிழ் கட்சிகளுடனான சந்திப்பு திடீர் இரத்து! அவசர அவசரமாக இந்தியா புறப்பட்டார் உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திடீரென இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ் பேசும் கட்சிகளுடனான சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு இறுதி நிமிடத்தில் இரத்தாகியுள்ளது.
அவர் திடீரென இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் நேற்று நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இறுதி நிமிடத்தில் இரத்துச் செய்யப்பட்டது.
இதன் காரணமாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் திட்டமிடப்பட்ட சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அவர் நாடு திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ் கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்த்தில் இறுதியாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று கையொப்பமிட்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி கோபால் பாக்லேவை சந்தித்து குறித்த ஆவணத்தை கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.