கொழும்பிற்கு வரும் இந்திய கடற்படையின் 'ஏராவத்' கப்பல்
இந்திய கடற்படையின் ஷர்துல் வகை லாண்டிங் ஷிப் டேங்க் (LST) கப்பலான ‘ஏராவத்’ (INS Airavat) ஜூன் 1ஆம் திகதி கொழும்புக்கு வருகை தரவுள்ளது.
ஜூன் 1 முதல் 4ஆம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும் இந்தக் கப்பல் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு செயற்பாட்டு திருப்புமுனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்திய அரசின் நன்கொடையின் கீழ், இந்திய கடலோர காவல் படையிலிருந்து இலங்கை கடலோர காவல் கப்பலான ‘சுரக்ஷா’விற்கான முக்கிய உதிரிப் பாகங்களையும் இந்தக் கப்பல் கொண்டு வருகிறது.
650 தொன் நிவாரண பொருட்கள்
கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் ஐ.பி. பட்டீல், மேற்கு கடற்படைப் பகுதி தளபதியை சந்திக்கவுள்ளதுடன் கப்பற்படையினர் இலங்கை கடற்படையினருடன் தொழில்முறை மற்றும் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர்.

அதோடு, கிளீன் சிறிலங்கா திட்டத்துக்கு ஆதரவாக, கொழும்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியிலும் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து பங்கேற்கின்றனர்.
2025 டிசம்பரில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலின்போது, இதே வகை கப்பலான INS Gharial, 650 தொன் நிவாரண உணவுப் பொருட்களுடன் இலங்கைக்கு வந்த நிலையில் பின்னர், 2026 பெப்ரவரியில், புயலால் சேதமடைந்த பாலங்களை மறுசீரமைக்க 10 பேலி பாலங்களையும் கொண்டு வந்தது.
இந்திய பிரதமரின் கொள்கை
இந்திய கடற்படை கப்பல்களின் இலங்கை வருகைகள், இரு நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை.

இது இந்தியாவின் ‘Neighbourhood First’ கொள்கைக்கும், இந்திய பிரதமரின் ‘பிராந்தியங்களின் பாதுகாப்பும் வளர்ச்சியும் சார்ந்த பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்’ (MAHASAGAR) என்ற பார்வைக்கும் ஏற்ப அமைவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |