இலங்கை மாணவர்களுக்கான புதிய புலமைப்பரிசில் திட்டம்...! வெளியான அறிவிப்பு
2026-2027 கல்வியாண்டிற்கான ஆயுஷ் (AYUSH) புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ், பட்டப்படிப்பு முதல் கலாநிதி (PhD) கற்கைநெறி வரை பயில விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் இளமாணிப் படிப்பைத் தொடர விரும்புவோர், க.பொ.த. உயர்தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் சித்திபெற்றிருக்க வேண்டும்.
யோகா துறையிலான B.Sc மற்றும் B.A கற்கைநெறிகளுக்கு உயர்தரத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் சித்தியடைந்திருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி கற்கைநெறி
பட்டப்படிப்பு மற்றும் கலாநிதி கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிப்போர், இந்திய மருத்துவ மத்திய பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இளமாணி அல்லது முதுமாணிப் பட்டங்களைப் பூர்த்தி செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இப்புலமைப்பரிசில் திட்டமானது முழுமையான கற்கைநெறி கட்டணம், மாதாந்த கொடுப்பனவுகள், தங்குமிட வசதிகள் மற்றும் வருடாந்த உதவித்தொகை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான நிதியுதவித் திட்டமாகும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரிகள் ICCR A2A இணையத்தளம் (www.a2ascholarships.iccr.gov.in) ஊடாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரிகள்
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 மே 15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவை 0112421605 அல்லது eduwing.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் ஊடாகத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் நோக்கில் வழங்கப்படும் இந்த வாய்ப்பு, இலங்கை மாணவர்களின் உயர்கல்விக்கு ஒரு சிறந்த தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |