இந்தியா - இலங்கை விமான சேவைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ புதிய நேரடி விமான சேவையை அறிவித்துள்ளது.
இந்த புதிய சேவை, டெல்லி மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையில் நேரடியாக இயக்கப்படும். இந்த விமான சேவை 2026 மார்ச் 29 முதல் தொடங்கப்படவுள்ளது.
வாரத்திற்கு 6 நாட்கள் இந்த சேவை இயக்கப்படும் என்றும், இதற்காக Airbus A320 வகை விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு 55 விமானங்கள்
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கமான உறவை பகிர்ந்து வருகின்றன.

Image Credit: The Siasat Daily
இந்நிலையில், இந்த புதிய விமான இணைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சேவையுடன், இண்டிகோ நிறுவனம் தற்போது கொழும்பு நோக்கி வாரத்திற்கு 55-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இவை மும்பை, பெங்ளூரு, ஐதராபாத், சென்னை மற்றும் தற்போது டெல்லி ஆகிய நகரங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணத்திற்கான சேவைகள்
மேலும், சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி நகரங்களிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாரத்திற்கு 10 விமான சேவைகளையும் இண்டிகோ இயக்குகிறது. இதன் மூலம் இலங்கையில் இண்டிகோ நிறுவனத்தின் சேவை வலையமைப்பு மேலும் வலுவடைந்துள்ளது.

பயணிகள், இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், தொலைபேசி செயலி(APP) அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்யலாம்.
மேலும், பயணத்திற்கு முன் உணவு மற்றும் பானங்களை (மதுபானங்களும் உட்பட) முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
அத்துடன், பயண அனுபவத்தை தனிப்பயனாக்கும் வகையில் “UpFront” மற்றும் “Flexi” போன்ற சேவைகளையும் பயணிகள் தேர்வு செய்யலாம். இவை கூடுதல் வசதியான இருக்கைகள், இலவச சிற்றுண்டிகள் மற்றும் எளிதான ரத்து வசதிகள் போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |