செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எச்சங்கள் : சர்வதேச விசாரணை கோரும் சுரேன்
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள் வெளிவருகின்ற நிலையில் சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை நிலை நாட்ட முடியும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசுவாமி (Gurusuwamy Surenthiran) தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “1996 ஆம் ஆண்டு செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்ட நிலையில் பதினைந்து மனித எலும்புக்கூடுகள் மட்டும்தான் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது எண்பது மனித எலும்புக் கூடுகளை கடந்து விட்டது.
600 வரையான சடலங்கள்
ஏற்கனவே செம்மணி புதை குழி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இராணுவ அதிகாரி குறித்த பகுதியில் 600 வரையான சடலங்கள் இருப்பதாக சாட்சியம் வழங்கியுள்ளார்.
இதன் அடிப்படையில் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை கண்காணிப்பதற்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் இலங்கை பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் பாரிய மனித எச்சங்கள் வெளிவருகின்ற நிலையில் அதனை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயலக்கூடும்.
தமிழ் மக்களுக்கு உரிய நீதி
இந்நிலையில் தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அரசாங்கம் அகழ்வுப் பணிக்கான நிதிகளை தடையின்றி வழங்க வேண்டும்.
ஆகவே குறித்த புதை குழி தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கு சர்வதேச விசாரணையை மேற்கொள்வதே சிறந்த தீர்வுக்கு வழிவகுக்கும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
