உலகின் மிகப்பெரிய அலுமினிய ஆலை மீது ஈரான் தாக்குதல்
உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (28) நடத்திய இந்தத் தாக்குதலில் தொழிற்சாலையின் ஊழியர்கள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பஹ்ரைனின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து நிறுவனம் தற்போது கணக்கிட்டு வருவதுடன், ஊழியர்களின் பாதுகாப்பே தங்களது முதன்மையான பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.
அலுமினியப் பற்றாக்குறை
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், தமது உற்பத்தித் திறனில் சுமார் 19 வீதம் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தது.

இந்த உற்பத்திக் குறைப்புகள், உலகளாவிய அலுமினியப் பற்றாக்குறை குறித்த அச்சத்தை அதிகரித்து வருவதுடன் இந்த மாத தொடக்கத்தில் அலுமினிய விலைகள் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்க உச்சத்தை எட்டியதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில் ஈரானின் இரண்டு உருக்குத் (Steel) தொழிற்சாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அலுமினியத் தொழிற்சாலைகளை இலக்கு வைத்ததாக ஈரானிய புரட்சிகர இராணுவம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |