அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் : ஐக்கிய நாடுகள் சபைக்கு ஈரான் அவசர கடிதம்
ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) ஐக்கிய நாடுகள் சபைக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியாக அமெரிக்காவைப் பொறுப்புக்கூறச் செய்யுமாறும் வலியுறுத்தி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா பொதுச்செயலாளர், பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்காக அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்
அந்தக் கடிதத்தில், ஈரான் மக்கள் மற்றும் அதன் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள அச்சுறுத்தல்களை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது.

குறிப்பாக, சமூக வலைதளங்களில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட "முழுமையான அழிவு மற்றும் தவிர்க்க முடியாத மரணம்" என்ற கருத்து, சர்வதேச சட்டங்களை மீறிய போர்க்குற்ற ஒப்புதல் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 1,300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் (காவல்துறை மற்றும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் இதிலடங்கும்).
9,669 பொதுமக்களின் இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் 7,943 குடியிருப்புகள், 65 பாடசாலைகள் மற்றும் 32 மருத்துவ மையங்கள் அடங்கும். பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கக் கட்டடங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மனிதநேயத்திற்கு எதிரானது.
சொத்து சேதங்களுக்கு இழப்பீடு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தரப்பு ஐ.நா சாசனத்தின் பிரிவு 2/4ஐ மீறி, ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ள அதேநேரம், ஐ.நா சாசனத்தின் பிரிவு 51ன் கீழ் தனது நாட்டைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை ஈரான் தொடர்ந்து பயன்படுத்தும்.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சர்வதேச குற்றவியல் பொறுப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு அமெரிக்கா முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |