மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சி
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள வான்வெளிப் போக்குவரத்துத் தடைகள் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மார்ச் மாத தொடக்கத்தில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நான்காம் திகதி வரையிலான காலப்பகுதியில் 23,116 பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (30,824) ஒப்பிடுகையில் 25 வீத வீழ்ச்சியாகும்.
வானூர்தி முனையங்கள்
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சுமார் 34 வீதமானோர் மத்திய கிழக்கு நாடுகளின் வானூர்தி முனையங்கள் ஊடாகவே பயணிக்கின்றனர்.
போர் காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதாலும், ஆயிரக்கணக்கான வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் ஐரோப்பிய பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது.

🛑 நாடுகள் ரீதியான வருகை (மார்ச் 01 தொடக்கம் 04) :
| இந்தியா | 5,275 பயணிகள் (23 %) |
| ரஷ்யா | 2,347 பயணிகள் (10 %) |
| ஐக்கிய இராச்சியம் | 1,875 பயணிகள் (8 %) |
| சீனா | (8 % - கடந்த ஆண்டை விட பாரிய வளர்ச்சி) |
| அவுஸ்திரேலியா | 1,296 பயணிகள் (6 %) |
இதில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
2026ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 579,771 பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாத் தலம்
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10.7 சதவீத வளர்ச்சியாக இருந்தபோதிலும், தற்போதைய மார்ச் மாத வீழ்ச்சி பல பில்லியன் ரூபா வருமான இழப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில், மத்திய கிழக்கு நெருக்கடியைச் சமாளிக்கச் சிங்கப்பூர், பேங்கொக் மற்றும் கோலாலம்பூர் போன்ற தென்கிழக்கு ஆசிய வானூர்தி முனையங்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துமாறு ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அத்தோடு, வளைகுடா நாடுகளுக்குச் செல்லவிருந்த பயணிகளை ஈர்க்கும் வகையில், இலங்கை தன்னை ஒரு பாதுகாப்பான மாற்றுச் சுற்றுலாத் தலம் என விளம்பரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ற்போது இலங்கையில் தங்கியுள்ள மற்றும் விமானத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்குத் தேவையான உதவிகளை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
அத்துடன் விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை மீள வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |