சர்வதேசச் சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகளின் விளைவாக, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் விலை ஞாயிற்றுக்கிழமை 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ஒரு கட்டத்தில் 114 டொலரை எட்டியது.
அணுசக்தி அச்சுறுத்தல்
திங்கட்கிழமை நிலவரப்படி இது 107.50 டொலராகக் காணப்படுகிறது.
2022 ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பிறகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த விலை உயர்வு குறித்துத் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தல் அழிக்கப்பட்டவுடன் விலைகள் வேகமாக குறையும்.
உலக அமைதிக்காக நாம் செலுத்தும் ஒரு சிறிய விலையே இது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் “ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz)” ஈரான் தற்காலிகமாக மூடியுள்ளதால் விநியோகம் முடங்கியுள்ளது.
ஈரானின் எண்ணெய்
இதனால் ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உற்பத்தியைக் குறைத்துள்ளன.
இந்தநிலையில், இஸ்ரேல் முதன்முறையாக ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதற்குப் பதிலடியாக, எரிசக்தி நிலையங்களைத் தாக்குவோம் என ஈரானின் புரட்சிகர இராணுவப் படை (IRGC) எச்சரித்துள்ளதுடன், போர் நீடித்தால் எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனடிப்படையில், எண்ணெய் விலை உயர்வால் ஆசியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
அத்தோடு, ஜப்பானின் நிக்கி (Nikkei) ஏழு சதவீதமும், தென்கொரியாவின் கோஸ்பி (KOSPI) எட்டு சதவீதமும் சரிவடைந்துள்ளன.
இந்தநிலையில், உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற அச்சம் சர்வதேச நிதி நிறுவனங்களிடையே எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |