அப்பாஸ் அராக்சிக்கு ஈரானிய புரட்சிகர காவல் படை அதிரடி உத்தரவு! அதிகரிக்கும் பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இரு நாட்டு தூதுக்குழுக்களும் சுவிட்சர்லாந்திற்கு வரவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், தெஹ்ரான் தரப்பு ஹோர்முஸ் நீரிணையை மூடுவது என்ற பலம் வாய்ந்த இராஜதந்திர ஆயுதத்துடனேயே இப்பேச்சுவார்த்தைக்கு வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லெபனானில் இஸ்ரேல் போர்நிறுத்த உடன்பாட்டை மீறி தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டி, கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் மறுத்திருந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அமெரிக்க மற்றும் ஈரானிய ஜனாதிபதிகள் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்ட பிறகு நடக்கவிருந்த முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே போர்நிறுத்தம் எட்டப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் லெபனானில் வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து மலைப்பகுதியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஈரானிய பிரதிநிதிகள் கலந்துகொள்வதை உறுதி செய்யும் பொருட்டு அவர்களைச் சமாதானப்படுத்தப் பாகிஸ்தானின் உயர்மட்ட மத்தியஸ்தர்களில் ஒருவர் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
முக்கிய நீர்வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை, லெபனானில் முழுமையான போர்நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு அழுத்தக் கருவியாகப் (Leverage) பார்க்கப்படுகிறது.
ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் (Tasnim) செய்தி முகமை, ஈரானின் வெளியுறவு அமைச்சரும் முதன்மைப் பேச்சுவார்த்தையாளருமான அப்பாஸ் அராக்சி பேச்சுவார்த்தைக்கு வெறும் கையுடன் செல்லக் கூடாது என எச்சரித்துள்ளது.

லெபனானில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதால் ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஈரானுக்கு இல்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் லெபனானில் அவரால் போர்நிறுத்தத்தை உறுதி செய்ய முடியாவிட்டால் ஒப்பந்தத்தின் ஏனைய அம்சங்களும் கேள்விக்குறியாகும் என்பதில் ஈரானிய தரப்பு தெளிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |