இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கிய ஈரானிய கப்பல்...! கடற்படையின் விசேட அறிவிப்பு
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானியக் கப்பலில் இருந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை கடற்படையின் ஊடகப்பேச்சாளர் புத்திக சம்பத் இன்று (04-02-2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், இந்த விபத்து இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் இடம்பெற்றிருந்தாலும், அது இலங்கையின் தேடுதல் மற்றும் மீட்புப் பிராந்தியத்திற்குள் (Search and Rescue Region) வருவதால், சர்வதேச கடப்பாடுகளின்படி இலங்கை கடற்படை உடனடியாகச் செயற்பட்டுள்ளது.
கடற்படை சந்தேகம்
கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள், தாம் ஈரானியக் கப்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவர்கள் தற்போது காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், குறிப்பிட்ட தேடுதல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களும் அதே கப்பலைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஈரானியப் போர்க்கப்பல்
ஈரானியப் போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், இலங்கை கடற்படை அதனை தற்போது உறுதிப்படுத்தவில்லை.

கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது கப்பலைக் காணவில்லை என்றும், அங்கு பாரிய எண்ணெய்க் கசிவுகள் மட்டுமே காணப்பட்டதாகவும் புத்திக சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே தொழில்நுட்ப விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும், தற்போதைக்கு இந்தச் சம்பவம் ஒரு விபத்து என்றே கருதப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑YOU MAY LIKE THIS...! 👇🏻
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |