பலாலி விமான நிலைய இழப்பீடு விவகாரத்தில் அமளி! சத்திய கடதாசியில் குளறுபடி
மக்களின் காணி மக்களுக்கே ,.. " என சொல்லி வரும் அரசாங்கம் மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில் கையகப்படுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக வலி. வடக்கு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக தனியார் காணிகளை சுவீகரித்துக்கொண்டு அதற்கான நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் காணி உரிமையாளர்களுக்கும் மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அதன் போது, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படாது பலாலி விமான நிலையமாக இருந்த காலப்பகுதியில் குறிப்பாக 1986ஆம் ஆண்டு கால பகுதியில் விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 436 காணி உரிமையாளர்களின் 267 ஏக்கர் காணி சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதி
ஆனால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டமையால் , அக்கால பகுதியில், விமான நிலைய அபிவிருத்திகள் தடைப்பட்டு , காணி சுவீகரிப்பு நடவடிக்கையும் தடைப்பட்டது.
பின்னரான 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்நாட்டு யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்தனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் , கட்டம் கட்டமாக விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட போதிலும் , விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் பாதுகாப்பு காரணம் என அப்பகுதி மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை.
விமான நிலையத்திற்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட காணிகளுக்கு மேலதிகமாகவும் காணிகள் விடுவிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பலாலி மேற்கு , மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும் குரும்பசிட்டி ஆகிய 4 நான்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 267 ஏக்கர் காணி தவிர தற்போது மேலதிகமாகவும் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு கடந்த மே மாதம் 26ஆம் திகதி பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் , இலங்கை இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட விசேட குழுவினர்கள் வருகை தந்து நேரில் ஆராய்ந்து சேர்ந்த பின்னர் கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றும் போது 774.98 ஏக்கர் காணி விமான நிலையத்திற்கு தேவை என தெரிவித்து இருந்தார்.
1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையமாக காணப்பட்ட போது , 267 ஏக்கர் காணியே விமான நிலைய விஸ்தரிப்புக்கு தேவை என சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக தரமுயர்ந்துள்ள நிலையில் , சர்வதேச விமான நிலையத்திற்காக மேலதிகமாக சுமார் 508 ஏக்கர் காணி சுவீகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இந்நிலையிலேயே, முதல் கட்டமாக, 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட காணி உரிமையாளர்களை அழைத்து , அவர்களின் காணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் முதல் கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது 1986ஆம் ஆண்டு காணிகளை சுவீகரித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது , காணிக்குள் இருந்த சொத்துக்களுக்கும் மதிப்பீடு காணப்பட்டது.
நான்கு வருடங்களுக்கான வட்டி
அவற்றுக்கும் பெறுமதி இருந்தது. தற்போது வெறும் காணிகளுக்கு மட்டுமே மதிப்பீடு நடைபெறவுள்ளது. ஒரு காணியில் வீடும்,வணிக கட்டடமும் இருந்து இருந்தால் , அந்த காணியில் இருந்த கட்டங்களுக்கான பெறுமதியினை தற்போது மதிப்பீடு செய்ய முடியாது.
ஏனெனில் பெரும்பாலான காணிகளுக்குள் கட்டடங்கள் இல்லை. காணிகளுக்குள் கட்டங்கள் இருந்தாலும் , அந்த கட்டடங்கள் 40 வருடங்களுக்கு முந்தியவை என்பதால் அவற்றுக்கும் பெறுமதியில்லை.
காணி 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டலும் , 2022ஆம் ஆண்டே சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டமையால் , 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியை காணி மதிப்பீட்டு திணைக்களத்தினர் நிர்ணயித்து , அதற்கான விலையே காணி விலையாக நிர்ணயித்து அந்த பணம் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் , 2022ஆம் ஆண்டு விலை நிர்ணயிக்கப்பட்டாலும் ,2026ஆம் ஆண்டே இழப்பீட்டு தொகை கிடைக்குமாயின் , அந்த நான்கு வருடங்களுக்கான வட்டியும் சேர்த்தே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
காணிகளுக்குள் இருந்த சொத்துக்களுக்கு இழப்பீடு இல்லை என்ற கவலை இருந்தாலும் , 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியில் இழப்பீடு வழங்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதி மொழியை நம்பி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணிகளை வழங்கி , இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள பெருமளவானோர் சம்மதித்தனர்.
அந்நிலையிலையே தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கும் காணி உரிமையாளர்கள் வந்தனர் கூட்டத்தில் காணி உரிமையாளர்களுக்கு வழங்கிய சத்திய கடதாசியில் காணப்பட்ட விடயங்களே காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணியது குறித்த சத்திய கடதாசியில், 04 ஆகஸ்ட் 2026 என திகதியிடப்பட்டு , "பிரிக்கப்படாத ஒரே காணி அலகாகக் கொண்டு, தனிப்பட்ட அமைவிடத்தைக் கருத்திற் கொள்ளாமல் ஒவ்வொரு ஆளுக்கும் சொந்தமான காணியின் அளவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நான் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்கின்றேன் " என்ற கூற்று காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்பட்டது.
குறித்த பகுதியில் உள்ள காணிகள் அனைத்தையும் "LOT - 1 " ஆக அடையாளப்படுத்தி, அதனை ஒரு காணியாக விலையை மதிப்பீடு செய்து , அந்த காணியின் பெறுமதியை , காணி உரிமையாளர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்வதா என குழப்பம் அடைந்தனர்.
ஒவ்வொருவருடைய காணியும் ஒவ்வொரு பெறுமதியாகும். பிரதான வீதியோரத்தை அண்டிய காணியும் , பிரதான வீதியில் இருந்து 15ஆவது காணியாக உள்ள காணியும் ஒரே பெறுமதி அல்ல.
காணிகள் அவற்றின் அமைவிடத்திற்கு ஏற்ப பெறுமதி மாறுபடும். அதனால் காணிகளை தனித்தனியாக அடையாளப்படுத்தி , இந்த காணிக்கு எவ்வளவு என தனித்தனியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்தனர்.
சத்திய கடதாசியில் காணப்பட்ட அடுத்த கூற்றான " காணியின் உரிமையினை உறுதி செய்வதற்கு காணி உறுதி இல்லாத போது செல்லுபடியான சட்டரீதியான ஆவணங்களை அடிப்படையாகக் பெற்றுக்கொள்ள நான் சம்மதம் தெரிவிக்கின்றேன்.
அதனை கொண்டு தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டினை பெற்றுக்கொள்கிறேன்" என காணப்பட்ட கூற்று. எங்குமே காணிக்கு இவ்வளவு இழப்பீடு என குறிப்பிடப்படவில்லை.
இழப்பீட்டுக் கொடுப்பனவு
பல இலட்ச ரூபாய் பெறுமதியான காணிகளுக்கு சில ஆயிரம் ரூபாய் தான் விலை என விலை மதிப்பீடு செய்து , அதனை இழப்பீடாக தந்தால் , அதொரு நியாமான விடயமாக அமையாது.
எனவே எமது காணிக்கு எவ்வளவு இழப்பீட்டு தொகை என நாம் அறிந்து கொண்டாலே , அதற்க்கான சம்மதத்தை தெரிவிக்க முடியும் என தெரிவித்தனர். அத்துடன் சத்திய கடதாசியில் நான்காவது கூற்றாக , " காணிக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து கொண்டதன் பின்னர் ஒப்பமிட நான் உடன்படுகின்றேன்" என காணப்பட்ட கூற்று , காணிக்கு எவ்வளவு இழப்பீடு என எமக்கு தெரிவிக்காது , காணிகளுக்கான விலை மதிப்பீட்டை இனி தான் மேற்கொள்ள போவதாக கூறிக்கொண்டு " இழப்பீட்டுக் கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து கொண்டதன் பின்னர் " என சத்திய கடதாசியில் குறிப்பிட்டு எம்மை கையொப்பம் இட கேட்பது எவ்வாறு நியாயம் என கேட்டு , காணி உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட தொடங்கினர்.
அதனை அடுத்து , கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு பெருமளவான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
அது காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து , அதனால் பெருமளவான காணி உரிமையாளர்கள், மண்டபத்தை விட்டு , வெளியேறி சென்றனர்.
தொடர்ந்து காணி உரிமையாளர்கள் தரப்பில் 07 பேர் கொண்டு குழு ஒன்று அமைப்பது என்றும் , அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக சத்திய கடதாசியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானித்து கூட்டம் முடிவடைந்தது பெரும்பாலான மக்கள் இழப்பீடோ அல்லது வேறு இடங்களில் வழங்கப்படும் மாற்று காணிகளையோ ஏற்க மறுத்து, "எங்கள் பூர்வீக நிலமே எங்களுக்கு வேண்டும்" என உறுதியாக நின்று போராடி வருகின்றனர்.
அவ்வாறான நிலையில் 40 வருட காலமாக தாம் போராடி களைத்து விட்டோம் , அரசாங்கம் தரும் நியாயமான இழப்பீட்டை பெற்றுக்கொள்வோம் என முன் வந்த போதிலும், காணி உரிமையாளர்களுக்கு சத்திய கடதாசி அவ நம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் , வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும் யாழ்ப்பாண சர்வதேச விமான விமான நிலைய விஸ்தரிப்பு அவசியம். பொருளாதார வளர்ச்சிக்காக, தலைமுறைகள் தாண்டியும் தமது பூர்வீக நிலங்களுக்கு செல்ல வேண்டும் என போராடி வரும் மக்களின் மனப்பூர்வ ஒப்புதலின்றி அவர்களின் காணிகளைச் சுவீகரிப்பது அநீதியாகும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வினை வழங்கியே அபிவிருத்தி விடயங்களை முன்னெடுக்க வேண்டும் அதுவே சமூக நீதியுமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |