உரிமையாளருக்கே வழங்கப்படவுள்ள யாழ்.கோப்பாய் காவல்நிலைய காணி!
யாழ்ப்பாணம் (Jaffna) கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணி அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கை நாளை (15) முன்னெடுக்கப்படவுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
பல்வேறு தரப்பு
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் காவல் நிலையம், கடந்த 30 வருடங்களாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலும் மற்றும் பயன்பாட்டிலும் உள்ளது.
அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர் இருப்பினும் அதற்கு பலன்கிட்டவில்லை.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான ஒன்பது உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
காணியை உரிமையாளர்
வழக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.
இருப்பினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை காவல்துறையினர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை.
முழுமையான இடமாற்றம்
இந்த நிலையில், நாளைய தினம் (14) நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அங்குள்ள காவல்துறையினரை வெளியேற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.
அதேவேளை கோப்பாய் காவல்துறை நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றது.
பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
