மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வைத்து 2000 ஆம் ஆண்டு இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம்.
சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில் தேவாலயத்திற்கு முன்னால் இன்று காலை 10.30 மணிக்கு அஞ்சிலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
நினைவேந்தல் நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயார் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களின் பெற்றோர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
படுகொலை

யுத்தம் காரணமாக தமது வீடுகளை விட்டு வெளியேறியிருந்த நிலையில், மீண்டும் தமது வீடுகளைச் சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாண நகரில் இருந்து 16 மைல்கள் தொலைவில் உள்ள மிருசுவிலுக்கு எட்டுப்பேர் சென்ற போது 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மிருசுவிலில் இருந்து உடுப்பிட்டிக்கு இடம்பெயர்ந்த சிலர் தமது வீடுகளையும், உடமைகளையும் பார்ப்பதற்காகவும் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி வரவும் உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்று, 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி மிருசுவிலுக்குச் சென்ற வேளை அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை அங்கு கண்டிருந்தனர்.
அவர்களுள் சிலர் தமது குடும்பத்தவர்களுடன் இத் தகவலை பகிர்ந்து கொண்டுண்டுள்ளனர். அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளங் காண முற்பட்டவேளை அங்கு நிலை கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.
இவ்வாறு அகப்பட்டவர்களில் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொதுமகனொருவரது வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டிருந்தனர்.
சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட படுகொலை

கைது செய்யப்பட்டவர்களில் பொன்னுத்துரை மகேசுவரன் என்பவர் பலத்த காயங்களுடன் இத்தாக்குதல்களில் இருந்து தப்பி வந்து தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் தெரியவந்தன.
அவர் வழங்கிய தகவலிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தன.
கொல்லப்பட்டவர்களில் மூவர் பதின்ம வயது சிறுவர்களும் ஐந்து வயதுச் சிறுவன் வில்வராசா பிரசாத் ஆகியோர் அடங்குவர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதிற்கும் 41 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்