போக்குவரத்து சேவைகளை பண்ணைப் பகுதியிலேயே தொடரத் தீர்மானம்?
யாழ் நகரில் மூடப்பட்டிருந்த கடைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட கடைகள் திறக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த 26 ஆம் திகதியிலிருந்து யாழ் நகர வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களில் 75 ற்கும் மேற்பட்ட கடைகளை தவிர ஏனைய கடைகள் நாளைய தினம் மீள திறக்கப்படுவதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.
இன்று காலை யாழ் மாநகர சபை பொது வைத்திய அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், ஏற்கனவே பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை தவிர்ந்த அரைவாசிக்கு மேற்பட்ட கடைகள் நாளை திறக்க அனுமதிக்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சேவைகளை தற்போது உள்ள நிலை போன்று பண்ணை பகுதியிலே பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் எனினும் அது தொடர்பான முடிவை எதிர்வரும்நாட்களில் கூடி ஆராய உள்ளதாகவும் தெரிவித்தார்.