யாழ்.மேயர் கைது- ராஜபக்ஷக்கள் ஆட்சிப் பீடம் ஏறியதிலிருந்து பேரினவாதம் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது!
ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக கோட்டாபய நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து நாட்டில் தமிழர்கள் மீதும், தமிழர் நிலங்கள் மீதும் சிங்கள பேரினவாதம் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளின் பின்னிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் இனவாத, மதவாதம் கொண்ட பௌத்த பிக்குகளே செயற்படுகின்றார்கள் இவர்களுக்கு ஜனாதிபதியின் பூரண ஆசியும், ஒத்துழைப்பும் கிடைக்கின்றது என தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தற்பொழுது நாட்டில் தமிழர்களை தலைதூக்க முடியாத அளவிற்கு எவ்வாறெல்லாம் அடக்கமுடியுமோ அவ்வாறெல்லாம் அடக்கி வைத்திருக்க முற்படும் இந்த சிங்கள அரசு சரியான முறையில் தனக்கென இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சீரான நிர்வாகத்தை உருவாக்கி வரும் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை இன்று அதிகாலை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை உடனடியாக இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும். யாழ் மாநகர காவல் படை பணியாளர்களுக்கு வழங்கிய சீருடை காரணமாக யாழ் மாநகர காவல் படையின் செயற்பாட்டையும் தடைசெய்து முதல்வர் வி.மணிவண்ணனை கைது செய்துள்ளது என்பதனை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
யாழ் மாநகர காவல் படையினரின் இதே வகையிலான சீருடை கொழும்பு மாநகர சபையிலும் உள்ளதாக வி.மணிவண்ணன் ஏற்கனவே தன்னிலை விளக்கம் அளித்துள்ளதன் பிற்பாடும் வேண்டும் என்றே தமிழர்களை பழிவாங்கும் அல்லது அச்சுறுத்தும் நோக்கோடு இலங்கை அரசு நடந்து கொண்டிருக்கின்றது.
சில நாட்களுக்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சிவப்பு மஞ்சல் நிற துணிகளை நிகழ்வுகளில் பாவிக்ககூடாது என்று ஒரு அறிக்கையை விட்டிருந்த நிலையில் தற்பொழுது நீலநிற சீருடையை பார்த்து அரசாங்கம் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் என்ன என தெரியவில்லை.?
எனவே இலங்கை அரசின் இந்த அராஜக செயலை கடுமையாக கண்டிப்பதோடு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியா அலுவலகத்தில் விசாரணை என்ற பெயரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்துகின்றேன் என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.