யாழ்.மாநகர முதல்வர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்- கனேடிய ஆளும் தரப்பிடம் இருந்து எழுந்த கண்டனம்!
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கனேடிய அரசின் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தனது கடுமையான கண்டனத்தையும் தனது டுவிட்டர் பதிவில் மூலம் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சமூகத்தை சார்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் தன்னிச்சையான கைதுகள் என்பன முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் தனது பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று இரவு 8 மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட முதல்வர் மணிவண்ணன் 6 மணி நேர விசாரணைகளின் பின்னர் அதிகாலையில் பொலிஸ்நிலையத்தில் வைத்து கைது செய்யபட்டார்.
தற்போது வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரத்தைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே யாழ். மாநகரக் காவல் படை எனும் குழு யாழ்ப்பாணம் மாநகர சபையால் உருவாக்கப்பட்டது.
மாநகர சபை ஊழியர்கள் ஐவரைக் கொண்ட இந்தக் குழு பொது இடங்களில் குப்பை கொண்டுவோர், பொது இடங்களில் வெற்றிலை துப்புவோரிடம் தண்டப் பணம் அறவிடும் செயற்பாட்டில் ஈடுபடும் என்று முதல்வர் மணிவண்ணன் அறிவித்திருந்தார்.
இருப்பினும் அந்தக் குழுவுக்குப் பயன்படுத்திய சீருடை, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்ட சீருடை ஒன்றை ஒத்திருந்தது என்று தெரிவித்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதையடுத்து அந்தக் குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
அந்த சீருடைகளைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாக்குமூலமும், சீருடையும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர்