கடனில் உள்ள நாடுகளுக்கு நாங்கள் கடன் கொடுக்க மாட்டோம் - ஜப்பானின் பிரதிப் பணிப்பாளர்!
ஜப்பானின் பரிசீலனைக்காக இலங்கை அரசாங்கத்தினால் பல முதலீட்டு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, ஜப்பானின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் யுகிகோ ஒகானோ கூறினார்.
இரு நாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதிபரினால் புதிய திட்டங்கள் முன்மொழியப்பட்ட போதிலும் ஜப்பானின் தற்போதைய கவனம் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு முடிந்தவரை விரைவாகவும் சுமுகமாகவும் உதவுவதாகவே இருக்கும் என ஒகானோ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படவிருந்து அகற்றப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து திட்டம் போன்ற குறிப்பிட்ட திட்டங்கள் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
கடன் கொடுக்கக் கூடாது
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் சாதகமான முடிவு எட்டப்பட்ட பின்னரே புதிய கடன் வழங்கப்பட வேண்டும் என்று ஒகானோ வலியுறுத்தியிருந்தார்.
பொறுப்பான கடனளிப்பவர் என்ற வகையில், ஏற்கனவே கடனில் உள்ள நாடுகளுக்கு நாங்கள் கடன் கொடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
எனினும் ஜப்பானிய அரசாங்கம் இந்த திட்டங்களை சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடும் எனவும் தெரிவித்துள்ளார்.