பேருந்தில் தவறவிட்ட நகை மற்றும் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துநர்
முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் குறித்த பணப்பையை சாரதி முருகையா மகேஸ்வரன் மற்றும் நடத்துநர் டெனிஸ் ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.
பணப்பையில் தேசிய அடையாள அட்டை, தங்கச் சங்கிலி மற்றும் பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் இருந்த நிலையில், அவை மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரி. ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து அதிகார சபை
பின்னர் பணப்பையின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சாரதி மற்றும் நடத்துநரின் இந்த முன்மாதிரியான செயலைப் பாராட்டும் வகையில், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கௌரவிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருவரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சாரதி மற்றும் நடத்துநரை கௌரவித்தனர்.
பொதுமக்களின் நம்பிக்கையையும் நேர்மையான சேவையையும் ஊக்குவிக்கும் வகையில், இவ்வாறான முன்மாதிரியான செயல்களில் ஈடுபடுவோர் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தொடர்ச்சியாக கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

