தமிழரசு கட்சியின் மட்டு. மாநகர சபை மேயராக ஊடகவியலாளர் சிவம் தெரிவு
மட்டக்களப்பு (Batticaloa) மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் இன்று புதன்கிழமை (11) போட்டிகள் இன்றி தெரிவு செய்யப்பட்டார்.
இந்த மாநகர சபைக்கான முதல்வர் பிரதி மேயரை தெரிவு செய்யும் நிகழ்வு மாநகர சபை ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.ஏம்.அஸ்மி தலைமையில் மாநகரசபையில் இடம்பெற்றது.
இதன்போது மாநகர சபை முதல்வராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதையடுத்து பிரதி மேயரை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வைரமுத்து தினேஸ்குமாரையும் பந்து சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக்குழு கே. சத்தியசீலன் ஆகியோரை முன்மொழியப்பட்டது.
பகிரங்க வாக்கெடுப்பு
இதனையடுத்து பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டதையடுத்து தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வைரமுத்து தினேஸ்குமார் 18 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சைக்குழு சத்தியசீலன் 4 வாக்குளையும் பெற்றுக் கொண்டதுடன் 12 பேர் நடுநிலைமையாக இருந்து கொண்டனர்.
இதில் வாக்கெடுப்பில் 18 வாக்குளை பெற்ற தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வைரமுத்து தினேஸ்குமார் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
