பசிலுக்கு எதிராக அரசு சாட்சியாக மாறும் நெருங்கிய சகா! நீதிமன்றில் அம்பலமான தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் (SLTPB) தலைவராகப் பணியாற்றிய பாஸ்வர குணரத்ன, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக அரசாங்க சாட்சியாக முன்னிலையாக ஒப்புக்கொண்டுள்ளார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பசில் ராஜபக்சவின் நெருங்கிய சகாவாக கருதப்படும் குணரத்ன, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபாயைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக 2014-ல் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிபதி பாசன் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குணரத்னவுக்காக முன்னிலையாகி ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரீன்சி அர்சகுலரத்ன, தனது கட்சிக்காரர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127-வது பிரிவின் கீழ் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிணை அனுமதி
அதன்படி, இவ்வழக்கில் தனது கட்சிக்காரரை அரசாங்க சாட்சியாக அறிவித்து, அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், இவ்வழக்கில் பசில் ராஜபக்ச சந்தேக நபராகக் குறிப்பிடப்படுவார் என குற்றப் புலனாய்வுத் துறை (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது வெளிநாட்டில் உள்ள பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிபதி அமரசேன பிடியாணை பிறப்பித்தார்.
சர்வதேச பிடியாணை
மேலும், பாஸ்வர குணரத்னவை ரூ. 100,000 ரொக்க பிணை மற்றும் தலா ரூ. 10 மில்லியன் மதிப்புள்ள இரண்டு சரிர பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் ரூமி ஜாஃபர் ஜூன் 17 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை அனுப்புவதற்கு நீதிமன்ற உத்தரவு தேவைப்பட்டால், அதுகுறித்த பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக டி-ஷர்ட்டுகளை அச்சிட்டு, அவற்றை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |