இராணுவ சித்திரவதையில் பலியானோர் யாழ்.மணியம் தோட்டத்தில்! அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்
1996களில் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்.மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச (Somaratne Rajapakse) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக, செம்மணிக்கு அப்பால் பல முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் வாக்குறுதியளிக்கிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கண்டறியப்பட்டு, அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் 141 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், 1996களில் செம்மணி முகாம் - துண்டி முகாம் வரை இடம்பெற்ற கைதுகள், படுகொலைகள் மற்றும் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ச முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்துள்ளார்.
செம்மணி மனிதப்படுகொலை
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதனூடாக வெளிப்படுத்துகிறேன்.
கடந்த ஜுலை மாதம் 9ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்துக்கு மேலதிகமாக, விடயங்களை யாழ் மக்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு இதனை வெளிப்படுத்துகிறேன்.
1998 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் வெளிப்படுத்தியபோது, அவை நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் கடவுளும், இயற்கையும் அவை உண்மை என்பதை நிரூபித்துள்ளன.
1999 ஆம் ஆண்டு நான் மனிதப்புதைகுழிகள் உள்ள இடங்களைக் காட்டிக்கொடுத்த வேளையில், அவற்றைக் காட்டிக்கொடுக்கவேண்டாம் எனவும், ஜனாதிபதி எனக்கு மன்னிப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டதன் காரணமாக சிலவற்றை மாத்திரம் காட்டிக்கொடுத்ததன் பின்னர், அதனைக் கைவிட்டுவிட்டேன்.
ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதம்
இவ்விடயம் தொடர்பில் மேலதிகமாக பல விடயங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் செம்மணி மாத்திரமன்றி பலசேனா தலைமையகம் முதல் 1996 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்திச்செல்லப்பட்டமையை அன்றைய பாதுகாப்புச்செயலாளர் தொடக்கம் சந்திரிக்கா வரை அறிந்திருந்தனர் என்பதை நான் யாழ் மக்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறேன்.
அரியாலை 7ஆவது இலங்கை இராணுவக் காலாட்படையினால் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சி3 முகாமின் 7 ஆவது இராணுவக் காலாட்படைக்கு உரிய சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம் தோட்டம் என அறியப்படும் பிரதேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டன.
அது இராணுவக்கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பகுதிகளுக்கு வெளியே இருந்த பிரதேசமாகும். அவ்வாறு சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் எனக்கு சரியாகத் தெரியாவிட்டாலும், அந்தப் பிரதேசம் (மணியம் தோட்டம்) எனக்கு நன்றாகத் தெரியும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன்.
இதற்கு மேலதிகமாக பிரதான கைதுகள் செம்மணியில் இடம்பெற்றதுடன், அங்கு கைதுசெய்யப்படமுடியாதவர்கள் ஏனைய சோதனைச்சாவடிகளில் கைதுசெய்யப்பட்டனர்.“ என தெரிவித்துள்ளார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 மணி நேரம் முன்
