கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியை இன்னும் 11 நாட்களில் மேற்கொள்ள தீர்மானம்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் 21ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என உத்தேச தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய இன்றைய தினம்(10) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்ட வைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இன்று சம்பவ இடத்திற்கு கள விஜயம் செய்திருந்தார்கள்.
17ஆம் திகதி இறுதி முடிவு

கள விஜயத்தின் பின்னர் இது தொடர்பாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
“இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் மனித புதைகுழி வழக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதை போன்று சந்தேகத்திற்கிடமான பிரதேசத்தை பார்வையிடுவதற்கு அழைக்கப்பட்ட தாெல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்தியர் வாசுதேவாவும், வேறு நிறுவனமும் பிரசன்னமாகியிருந்தார்கள்.
தொல்பொருள் திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு இதற்கான பாதீடும், திட்டமும் ஒரு கிழமைக்குள் நீதிமன்றுக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது.
ஆகவே அவர்கள் இந்த மாதம் 17ஆம் திகதி அதற்கான திட்டங்களை தாக்கல் செய்ய இருக்கின்றார்கள்.
அதனைத் தொடர்ந்து 21ஆம் திகதி இந்த அகழ்வு பணி நடைபெற தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அது இந்த மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படும்” என்றார்.