தையிட்டி விகாரை காணி அளவீடு : காவல்துறையினரால் பதற்றம்
யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்குள் அனுமதிப்பது தொடர்பில் பலாலி காவல்துறையினர் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களில் காணி உறுதிகள் வைத்துள்ள 17 பேரின் காணிகளை அளவீடு செய்வதற்காக இன்றைய தினம் (28) விகாரை அமைந்துள்ள பகுதிக்கு வருமாறு அவர்களுக்கு மாவட்ட செயலர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில், காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு சென்ற வேளை, விகாரைக்கு அருகில் காவல்துறை வீதி தடையை ஏற்படுத்திய காவல்துறையினர், விகாரை பகுதிக்கு செல்வோரின் அடையாள அட்டைகளை பரிசோதித்து, பதிவுகளை மேற்கொண்டதுடன், காணி உரிமையாளர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை கைகளில் வைத்து சோதனையிட்டு, பெயர் பட்டியலில் பெயர் உள்ளவர்களை மாத்திரமே அனுமதிப்போம் என கூறியுள்ளனர்.
காவல்துறையினருடன் தர்க்கம்
இந்த நிலையில் தமது காணிகளை அடையாளம் காட்ட வருமாறு மாவட்ட செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளதனால் தான் தாங்கள் வந்ததாகவும், பதிவுகளை மேற்கொண்டு காவல்துறை கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்து தான் எமது காணிகளை அடையாளம் கட்ட வேண்டும் என கூறினால் திரும்பி வீடு செல்கிறோம் என காவல்துறையினருடன் தர்க்கப்பட்டதனால் அவ்விடத்தில் குழப்பமான நிலைமை ஏற்பட்டது.

அதேவேளை தென்னிலங்கையில் இருந்து சில பிக்குகள் உள்ளிட்ட, தென்னிலங்கை வாசிகள் சிலர் எந்த பதிவுகளும் இல்லாமல் உள்ளே சென்றுள்ள நிலையில், அவர்களுக்கு இருக்கும் உரிமை காணி உரிமையாளர்களான எங்களுக்கு இல்லையா என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.
தற்போது காணி அளவீட்டு பணிகளுக்காக நிலஅளவை திணைக்கள அதிகாரிகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலர் ,உள்ளிட்ட அதிகாரிகள் வருகை தந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜாவும் வருகை தந்துள்ளார்.
காலை 08 மணிக்கு அளவீட்டு பணிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 10 மணி வரையில் அளவீட்டு பணிகள் எவையும் முன்னெடுக்கப்படாத நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |