சலே தொடர்பில் வெளியான புதிய தகவல்! நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே தொடர்பான உண்மைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்னும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை என்று கோட்டை நீதவான் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரிக்கப்படும் முன்னாள் புலனாய்வுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சார்பாக சட்டத்தரணிகள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அறிக்கை
அதன்போது, இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிக்கை செய்ததா என்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே விசாரித்துள்ளார்.

அப்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னிலையான அதிகாரி, உண்மைகள் இன்னும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை நிராகரிப்பு
மேலும், சலேவின் சட்டத்தரணி இலங்கைக்கு அவர் ஆற்றிய சேவையின் காரணமாக அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரது வீட்டிலிருந்து உணவுப் பொருட்களைப் பெறவும், அவரது மகன் அவரை அணுகவும் அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

அவரது சட்டத்தரணிகள் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கவும், பெறவும் வசதிகளை வழங்கவும், அவரது வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிக்கவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
இருப்பினும், சந்தேக நபர் தொடர்பான உண்மைகள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படாததால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |