நுவரெலியாவில் உயிருக்கு போராடிய சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு
அக்கரப்பத்தனை - ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையொன்று, நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
சிறுத்தையை கண்ட பொதுமக்கள் அது பற்றி அக்கரப்பத்தனை காவல்துறையினருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கற்பாறை நீர் தேக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை, மூன்று மணிநேர போராட்டத்துக்கு மத்தியில் மீட்டனர்.
மிருக வைத்தியசாலையில் அனுமதி
சம்பவ இடத்திற்கு வருகைதந்த ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் வைத்திய பரிசோதனை மேற்கொண்டு சிறுத்தையின் பின் கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக உடவலவ தேசிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
சுமார் 6 வயதுடைய ஆண் சிறுத்தையே இவ்வாறு மீட்கப்பட்டதாக நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் உரிய சிகிச்சைகளின் பின்னர் சிறுத்தை வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
