அவர்களை பதவியிலிருந்து நீக்கும் வரை நாங்கள் வரமாட்டோம்! கோட்டாபயவுக்கு பதிலடி கொடுத்த மைத்திரி தரப்பு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாளை 29ஆம் திகதி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தநிலையில், சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் இராஜாங்க அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்படும் வரை இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அமைச்சரவையின் இராஜினாமாவைத் தொடர்ந்து சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு இணங்கிய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல்களை நடத்துவதற்காக அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்களை நாளை கூட்டத்திற்கு அழைத்தார்.
நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டுத் தீர்மானத்திற்கு எதிராக, சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் அண்மையில் அரச தலைவரிடம் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.