சிறிலங்காவில் போடப்படும் முடிச்சு! பல தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் மைத்திரி
இலங்கையில் அடுத்து நடைபெற போகும் தேசிய தேர்தல் தொடர்பாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இணையத்தள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் அடுத்து நடைபெறும் தேசிய ரீதியான தேர்தல் பெரும்பாலும் பொதுத் தேர்தலாக இருக்கலாம் என நம்புகிறேன். அத்துடன் அடுத்த அரச தலைவர் தேர்தலை நடத்த இன்னும் இரண்டரை வருட காலம் மீதமுள்ளது. இப்படியான சூழ்நிலையில், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் தயாராகி வருவது சம்பந்தமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைக்கும் தந்திரமாக அரசாங்கம் அரசியலமைப்பு முடிச்சை போட தயாராகி வருகிறது. இந்த விடயங்கள் காரணமாகவே அடுத்த தேர்தல் பொதுத் தேர்தலாக இருக்கலாம் என தான் நம்புவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிடடுள்ளார்.
அதேபோல் அரசியலில் நீண்டகால நண்பர்களும் இல்லை நீண்டகால எதிரிகளும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அதன் கூட்டணிக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மற்றும் அதன் தலைவரான மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரசாங்கத்தை வெளிப்படையாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கத்தில் இவர்கள் அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்து வருவதாக பேசப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், நாட்டில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுமாயின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசியல் கூட்டணி தனித்து அந்த தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.