ஹார்முஸ் நீரிணையை கடந்த மலேசியக் கப்பல்: உயர்மட்ட இராஜதந்திர முயற்சி வெற்றி
ஹார்முஸ் நீரிணையில் சிக்கியிருந்த மலேசியாவிற்குச் சொந்தமான வணிகக் கப்பல்களில் ஒன்றுக்கு ஈரான் பாதுகாப்பான அனுமதி வழங்கியுள்ளது.
இதனை மலேசிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வணிகக் கப்பல்
குறித்த அறிக்கையின்படி, நீரிணையில் காத்திருந்த ஏழு மலேசியக் கப்பல்களில் ஒன்றுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து அக் கப்பல் தற்போது தனது இலக்கை நோக்கிப் பாதுகாப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திர முயற்சிகளின் நேரடி விளைவாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் படகின் பெயர், அதில் உள்ள சரக்குகள் அல்லது அதன் இறுதி இலக்கு போன்ற விபரங்களை அமைச்சகம் வெளியிடவில்லை.
இந்தச் சாதகமான நகர்வு குறித்து கோலாலம்பூரில் உள்ள ஈரானிய தூதரகம் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “இஸ்லாமிய குடியரசான ஈரான் தனது நண்பர்களை ஒருபோதும் மறப்பதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு வணிகக் கப்பல் இராஜதந்திர ரீதியில் பாதுகாப்பாகக் கடந்து சென்றிருப்பது சர்வதேசக் கடல்சார் வர்த்தக வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |