பொத்துவில் போராட்டம் மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து பொலிகண்டி வரையில் தமிழர்களின் உரிமைக்கான நடைபவணி இடம் பெற்று வருகின்ற நிலையில், குறித்த பேரணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவதற்க்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்று இன்றைய தினம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி டினேஸன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்ற நியாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் குறித்த பவனி நுழைவதையும் எதிர்வருகின்ற சுகந்திர தினத்தையும் அல்லது இன ஒன்றுமையையும் குழப்புகின்ற வகையிலும் இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்ற வகையிலும் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களோ அதற்கான ஏற்பாடுகளோ மன்னார் மாவட்டத்திற்குள் மேற்கொள்ளக் கூடாது என்ற தடையுத்தரவினை 14 நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்து கட்டளையினை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டளையானது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ் மாநகரசபை மேயர் மணிவண்ணன் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பதின்நான்கு நபர்களுக்கு எதிராக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கானது இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் AR150/21 தாக்கல் செய்யப்பட்டு சமர்பணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த சமர்பணமானது பொது தொல்லையாக எற்படுவதாகவும் ICCPR சட்டத்தின் கீழாகவும் அதே நேரம் கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கட்டளை கோரியிருந்தது.
இச்சந்தர்ப்பத்தில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் குறித்த கட்டளைக்கு எதிராக வெறுமனே ஊகத்தின் அடிப்படையில் இந்த வழங்கு தாக்கல் செய்யப்படுவதாகவும் தனிமைப்படுத்தல் விதிகளை கடந்து போராட்டங்கள் மேற்கொள்வது ஜனநாயக உரிமை எனவும் இது அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட உரிமை எனவும் சட்டத்தரணிகளால் அட்சேபனை தெரிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸாரால் கோரப்பட்ட கட்டளை மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.