மன்னார் வளைகுடாவில் லிமோனைட் மணல் அகழ்வுக்கு அனுமதி!
மன்னார் வளைகுடாவில் லிமோனைட் மணல் அகழ்வை மேற்கொள்ள அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் மன்னார், அதன் கடல் தேசிய பூங்கா மற்றும் அதன் வளமான பல்லுயிர் பெருக்கத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையம் தெரிவித்துள்ளது.
26 கி.மீ நீளமும் 8 கி.மீ அகலமும் கொண்ட மன்னார் தீவின் மணலில் லிமோனைட் என்ற தாதுக்கள் ஏராளமாக உள்ளன.
டைட்டானியம் டை ஒக்சைடு, டைட்டானியம் (ஐஏ) ஒக்சைடு அல்லது டைட்டானியம் (TiO) ஆகியவற்றின் முக்கிய மூலம் லிமோனைட் ஆகும்.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் சுரங்கத் திட்டம் மன்னார் தீவில் நிலத்தடி நீர் அட்டவணைக்கு சேதத்தை ஏற்படுத்தும். அத்துடன் இதன் விளைவாக உப்பு நீர் குடிநீரை மாசுபடுத்தும் அபாயம் ஏற்படும் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் இறுதியில் மீன்பிடி மற்றும் பிற முதன்மைத் தொழில்களைச் சார்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும்.
அத்துடன் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையம் குறிப்பிட்டுள்ளது.