சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட சத்துரகொண்டான் படுகொலை- விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்!
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். படுகொலை நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு காவல்துறையினர் தொடர் அச்சுறுத்தல்களை விடுத்துவரும் நிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவாக, சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே, 31ஆவது ஆண்டு நினைவு தினம் கடந்த செப்டம்பர் மாதம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சம் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எளிமையாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்திய மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான த.கௌரி மற்றும் துரைசிங்கம் மதன் ஆகியோர் அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டமைக்கான நோக்கம் என்ன மற்றும் விளக்கேற்றியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்துள்ளார்.
காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார். சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் ஆதாரங்களுடன் சாட்சியங்கள் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் விளக்கேற்றியமை குறித்து விசாரணைகள் நடாத்தப்படுவது இந்த நாட்டின் சட்ட நிலைமையினை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான் கொக்குவில் பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் கற்ப்பிணி தாய்மார் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் என 184 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் அழுகுரல்கள் மற்றும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும் பின்பு அப்பிரதேசத்தில் புகைமண்டலம் தெரிந்ததுடன் பிணவாடை வீசியதாக வீடுகளில் மறைந்திருந்து உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர்.
இதில் ஒருவர் மாத்திரம் பலத்த காயங்களுடன் உயிர்தப்பி அரச தலைலவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதிலும் இதுவரை எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.