வடபகுதி மக்களைக் காப்பாற்றுங்கள் - சபையில் ரவிகரன் எம்.பி கோரிக்கை
வடபகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளால் ஒரு தொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்கால தலைமுறையினரையும் பொதுமக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தள்ளாடிக் கொண்டு இருக்கின்றது
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், போதையினால் நாடு மட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக் கொண்டு தான் இருக்கின்றது.
இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன்.
இருப்பினும் சக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமுர்த்தியால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நிச்சயமாக மிகவும் பொருத்தமான ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையாகும். நாட்டின் அதியுயர்பீடமாகக் காணப்படும் நாடாளுமன்றிலே, தற்போது நாட்டில் போதைப்பொருட்களால் சீரழிந்துகொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.
பாடசாலைகளில் போதைப்பொருள்
இந்த போதைப்பொருள் ஊடுருவல்கள் பாடசாலைகளில் கூட இடம்பெற்றுவருவதை தற்போது நாம் அவதானித்து வருகின்றோம். போதைப்பொருள் பாவனையால் எமது சந்ததிகள், ஒருதொகுதி எதிர்கால தலைமுறையினர் அழிந்து வருகின்றனர்.
நான் கிராமந்தோறும் மக்கள் சந்திப்பிற்காகச் செல்கின்றபோது, போதைப்பொருள் பாவனையால் தமது கிராமத்தில் பலர் இறந்துவிட்டதாகவும், பலர் இறக்கும் நிலையில் பாதிக்கப்பட்டு தடுமாறிக்கொண்டிருப்பதாகவும் சில கிராமங்களில் மக்களால் என்னிடம் முறையிடப்பட்டன.
நாட்டில் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம்யார்? எமது நாட்டிலிருக்கும் பாதுகாப்புப் படையினர் சீராகச் செயற்பட்டால் இவ்வாறு போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் இறப்புக்களோ, பாதிப்புக்களோ இருக்காது.
இந்தப் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் காவல்துறையினருக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது.
சட்டம் ஒழுங்கு முறையாகச் செயற்படுத்துங்கள். இந்த விடயத்தில் கூடிய கரிசனைசெலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
