வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் எச்சரிக்கை
வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள், சில காவல்துறையினர் உள்ளதாகவும் இவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்றிரவு (28) இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களை பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 06 உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளது.
காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழப்பு
இன்று ஒரு காவல்துறை உத்தியோகத்தரின் உயிரை கூட காவு வாங்கியுள்ளனர். இது ஆட்டை கடிச்சு , மாட்டை கடிச்ச கதையாக காவல்துறை உத்தியோகத்தரின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்தி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதன் ஊடாக ஒரு கியூப் மண் 7,500 ரூபாய்க்கு வழங்க முடியும். அதனால் ஒரு டிப்பர் மண் 23,000ற்கு பெற முடியும்.

யாழ்ப்பாணத்திற்கு அதனை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட செலவுகளை கணித்தால், சுமார் 55,000 தொடக்கம் 65,000ற்கு மண்ணை விநியோகிக்க முடியும்.
சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மணல் மாஃபியாக்கள் ஒரு டிப்பர் மண்ணை ஒரு இலட்சத்து 20,000 ரூபாய் வரைக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். அவ்வாறான மண் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள் சில காவலதுறையினர் உள்ளனர் என்பதும் எமக்கு தெரியும்.
கடந்த கால அரசாங்கங்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் விளையாட்டு கட்டலாம் என நினைக்க வேண்டாம் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்.
காவல்துறையினருக்கும் அறிவுறுத்தல்
சட்டவிரோத மணலுடன் முதல் தடவை கைப்பற்றப்படும் வாகனத்திற்கு 50,000 ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். இரண்டாவது தடவையும் அதே தவறை செய்தால் 20 இலட்சம் ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். மூன்றாவது தடவையும் அதே தவறை செய்தால் வாகனம் அரசுடைமையாக்கப்படும்.
இது தொடர்பான சட்டங்கள் மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பில் நீதி அமைச்சு உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்கள் நடாத்தியுள்ளோம்.

அத்துடன் காவல்துறையினரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கையாக இருக்காது, மாஃபியாக்கள் மீதான கடுமையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினருக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.
மாஃபியாக்களுக்கு மக்கள் பயப்படுகின்றார்கள். அவர்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்க பயப்படுகிறார்கள். அதனால் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க மிக விரைவில் தொலைபேசி இலக்கங்களை அறிவிப்போம். அதனூடாக அவர்கள் தகவல்களை தெரியப்படுத்த முடியும்.
இவ்வாறான செயற்பாடுகளை தனியே காவல்துறையினரோ, அரசாங்கமோ கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களின் பங்களிப்பு கட்டாயம் தேவை“ என மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |